நிர்மலா தேவியிடம் அதிகாரி சந்தானம் விசாரணை நடத்த முடியுமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இது தொடர்பாக சட்ட உதவி அமைப்பு வழக்கறிஞர் விளக்கம் அளித்தார்.
நிர்மலா தேவி, அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியின் கணிதத்துறை பேராசிரியர்! மாணவிகள் சிலரை பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுக்கு விருந்தாக்க பாலியல் வலை விரித்ததாக இவர் மீது புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
நிர்மலா தேவி விவகாரத்தை சிபிசிஐடி விசாரிக்க, மாநில டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டார். ஆளுனர் பன்வாரிலால் புரோஹித், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.சந்தானத்தை விசாரணை அதிகாரியாக நியமித்தார். இரு தரப்பும் தனித்தனியாக விசாரித்து வருகிறார்கள்.
நிர்மலா தேவியை சிபிசிஐடி 5 நாட்களுக்கு காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. இந்த விசாரணையின்போதே நிர்மலா தேவியை சந்திக்க அதிகாரி சந்தானம் அனுமதிக்கப்படுவார் என முதலில் தகவல்கள் வெளிவந்தன. ஆனால் சிபிசிஐடி போலீஸ் அதற்கு உடன்படவில்லை. நீதிமன்ற அனுமதி இல்லாமல் சந்தானம் விசாரணைக் குழுவிடம் நிர்மலா தேவியை தங்களால் ஒப்படைக்க முடியாது என சிபிசிஐடி தரப்பில் கூறப்பட்டுவிட்டதாக தெரிகிறது.
நிர்மலா தேவியிடம் 5 நாள் விசாரணை முடிந்ததும், அவரை சிபிசிஐடி போலீஸார் சிறையில் அடைப்பார்கள். அதன் பிறகாவது சந்தானம் குழு தனது விசாரணையை நிர்மலா தேவியிடம் நடத்த முடியுமா? அல்லது, நீதிமன்ற காவல் என்ற முறையில் அவர் சிறையில் இருப்பதால் நீதிமன்ற அனுமதி பெற்றுத்தான் விசாரிக்க முடியுமா? என்கிற கேள்வியும் எழுகிறது.
வழக்கறிஞர் கிரினிவாசபிரசாத்
இது தொடர்பாக நாகர்கோவிலில் மனித உரிமை பாதுகாப்பு இலவச சட்ட உதவி மையம் என்ற பெயரில் அமைப்பு நடத்தி வரும் வழக்கறிஞர் கிரினிவாசபிரசாத் கூறுகையில், ‘சிபிசிஐடி காவலில் நிர்மலா தேவி இருக்கும்போது, அவரிடம் சந்தானம் குழு விசாரிக்க வாய்ப்பில்லை. அதேசமயம், நிர்மலா தேவி சிறையில் அடைக்கப்பட்ட பிறகு அவரிடம் விசாரிக்க சந்தானம் குழுவுக்கு எந்தத் தடையும் இல்லை.
அரசியல் சாசனப் பதவி வகிக்கும் ஆளுனரால் அறிவிக்கப்பட்ட சந்தானம் குழு, சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு குழு! இன்னும் சொல்வதாக இருந்தால் வேறு எந்த அமைப்பு அறிவிக்கும் குழுவைவிட ஆளுனர் அறிவிக்கும் குழுவுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பும் உரிமையும் அதிகம்! எனவே சிறை அதிகாரியிடம் முறைப்படியான ஒரு அனுமதியை பெற்றுக்கொண்டு நிர்மலா தேவியிடம் சந்தானம் குழு விசாரிக்க முடியும்.
ஒரு கைதி சிறையில் நீதிமன்றக் காவலில் இருந்தாலும்கூட, அவரை சந்திக்க சிறை விதிகளின்படி பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். வழக்கறிஞர்கள் சந்தித்து கைதிகளின் கையெழுத்துகளை பெற முடிகிறது. அந்த அடிப்படையில் நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்த சந்தானம் குழு தனியாக நீதிமன்றத்தில் அனுமதி பெறத் தேவையில்லை. சிறை அதிகாரியிடம் அனுமதி பெற்றால் போதும்’ என்றார் வழக்கறிஞர் கிரினிவாசபிரசாத்.
திங்கட்கிழமைக்கு மேல் நிர்மலா தேவியிடம் விசாரிக்கும் பணியை சந்தானம் குழு தொடங்கும் எனத் தெரிகிறது.