தமிழக ராணுவ தொழில் வழித்தடத்தை திருச்சியில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தொடங்கி வைத்தார். சென்னை, ஓசூர், சேலம், கோயம்புத்தூர், திருச்சி ஆகிய இடங்களில் உள்ள ராணுவ தளவாட தொழிற்சாலைகளை இணைக்கும் வகையில் இந்த வழித்தடம் அமைகிறது.
இந்த விழாவில் புதிய முதலீடுகள், புதிய ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள் பற்றிய அறிவிப்புகள் இடம்பெற்றன.
விழாவில் பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், "இந்த தொழில் வழித்தடத்தை பாலக்காடு வரை நீட்டிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. தற்போது அதற்கான சாத்தியம் இல்லை. எனவே, உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் அலிகார் பகுதியில் ராணுவ தொழில் வழித்தடம் செயல்பட்டு வருகிறது.
இந்தத் திட்டம் பல்வேறு தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் ரூ.3100 கோடி முதலீட்டையும் பெற்று தொடங்கப்படுகிறது. தமிழகத்தில் அதிமுகவும் பாஜகவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இரு கட்சிகளுக்கும் இடையில் எந்த பிரச்சனையும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் பழி சொல்லிக்கொண்டிருக்கக் கூடாது.
தமிழகத்தில் இருந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை மட்டும் கொடுத்த போதிலும், எந்த குறையும் இன்றி தமிழகத்திற்கு திட்டங்களை பிரதமர் மோடி செய்கிறார். எம்.ஜி.ஆர். ஜெயலலிதா கனவுகளை நிறைவேற்றுவது பிரதமர் மோடி தான்" என்றார்.
மேலும், ராணுவ போலீசில் பெண்களுக்கு 20% ஒதுக்க உத்தரவு வழங்கப்பட்டதையும் சுட்டிக்காட்டினார். திருச்சி மற்றும் ஆவடியில் உள்ள பொதுத்துறை, பாதுகாப்பு துறை நிறுவனங்களை மூடும் திட்டம் இல்லை எனவும் குறிப்பிட்டார்.
திருச்சியில் இன்று தொடங்கிவைக்கப்பட்டிருப்பது நாட்டின் இரண்டாவது ராணுவ தொழிலக உற்பத்தி வழித்தடம் ஆகும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் முதல் ராணுவ தொழிலக உற்பத்தி வழித்தடத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.