Advertisment

ஜெயலலிதாவுக்கு நடந்த அநீதி; தி.மு.க மறந்து விட்டதா? கனிமொழிக்கு நிர்மலா சீதாராமன் பதில்

ஜெயலலிதாவின் புடவையை இழுத்தக் கட்சி தி.மு.க; கவுரவ சபை, திரவுபதி குறித்து ஆச்சரியமளிக்கிறது; கனிமொழிக்கு மக்களவையில் நிர்மலா சீதாராமன் பதில்

author-image
WebDesk
New Update
Nirmala Sitharaman

நிர்மலா சீதாராமன்

தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் சேலையை இழுத்த கட்சியான தி.மு.க, பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது என்று கனிமொழிக்கு பதிலடி தரும் வகையில் மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.

Advertisment

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும், அறிக்கை வெளியிட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தல்களுக்கு எந்த பலனும் கிட்டாததால், இறுதியாக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது கடந்த 3 நாட்களாக விவாதம் நடைபெற்றது.

இதையும் படியுங்கள்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு: நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, ​​மணிப்பூர் விவகாரத்தைச் சுட்டிக்காட்டி மக்களவையில் பேசிய தி.மு.க எம்.பி கனிமொழி, நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று கூறி மத்திய அரசைக் குற்றம் சாட்டினார்.

இந்தநிலையில், இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பதில் அளித்து உரையாற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கனிமொழியின் குற்றச்சாட்டுகளுக்கு காட்டமாக பதில் அளித்தார். மக்களவையில் பேசிய நிர்மலா சீதாராமன், “மா.பொ.சி கடந்த 1951ல் தமிழ் முரசில் ஒரு குறிப்பை எழுதியுள்ளார். சிலப்பதிகாரம் நாம் திராவிடர் அல்லர். தமிழர். நமது தாயகத்தின் பெயர் திராவிடம் அன்று தமிழகம். அதன் வடக்கு எல்லை விந்தியம் அன்று வேங்கடம். தமிழ்நாட்டில் அந்தணர் ஆரியர் அல்லர் தமிழர். தமிழருடைய பண்பாடு, பழக்க வழக்கங்களுக்கும் பெரும்பாலும் வேங்கடத்துக்கு வெளியே உள்ளவர்களின் பண்பாடு, பழக்க வழக்கங்களுக்கும், வேறானவை ஆயினும் விரோதமானது அல்ல என்று சிலப்பதிகாரம் கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கனிமொழி இந்த அவையில் மகாபாரதத்தில் இருந்து திரௌபதியைப் பற்றி பேசினார். ஆம், மகாபாரதத்தில் திரௌபதி அவமானப்படுத்தப்பட்டார். நான் மறுக்கவில்லை. பெண்களை பொறுத்தவரை, மோசமாக அவர்கள் நடத்தப்படுவதும் தவறாக விமர்சிக்கப்படுவதும் எங்கள் ஒவ்வொருவருக்கும் வலியையே தருகிறது. மணிப்பூராக இருந்தாலும், ராஜஸ்தானாக இருந்தாலும், டெல்லியாக இருந்தாலும் எல்லா இடங்களிலும் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதை நாங்கள் முக்கியப் பிரச்சினையாகக் கருதுகிறோம். இதை நாங்கள் அரசியலாக்குவதில்லை.

ஆனால், பெண்களின் பாதுகாப்பு குறித்து தி.மு.க பேசுவது ஆச்சரியமாக உள்ளது. 1989-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடந்த ஒரு சம்பவத்தை இந்த முழு சபைக்கும் நினைவூட்ட விரும்புகிறேன். ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது சட்டப்பேரவையில் அவரது சேலை இழுக்கப்பட்டது. அப்போது அங்கு அமர்ந்திருந்த தி.மு.க-வினர் அவரைப் பார்த்துச் சிரித்தனர். ஜெயலலிதாவின் புடவையை இழுத்தக் கட்சி தி.மு.க. அப்போது ஜெயலலிதா ஒரு சபதம் எடுத்தார். இந்த அவைக்கு நான் வரமாட்டேன், வருவதாக இருந்தால் முதல்வராகத்தான் மீண்டும் வருவேன் என்று அப்போது ஜெயலலிதா சபதம் செய்து, அதன்படியே 2 ஆண்டுகள் கழித்து முதல்வராக வந்தார். ஆனால், நீங்கள் கவுரவ சபை குறித்தும், திரவுபதி குறித்தும் பேசுகிறீர்கள். ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்பது மறந்துவிட்டதா?” என்று கேள்வி எழுப்பினார்.

இந்தியை திணிக்க மத்திய அரசு முயல்வதாக கனிமொழி முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், “சிலப்பதிகாரத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளதோ அதன் உண்மை உணர்வை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார். ஜவஹர்லால் நேருவிடம் கொடுக்கப்பட்ட செங்கோல் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. அது தமிழுக்கு நேர்ந்த இழுக்கு இல்லையா? ஆனால், பிரதமர் நரேந்திர மோடி, அந்த செங்கோலை நாடாளுமன்றத்தில் நீதியின் அடையாளமாக பிரதிஷ்டை செய்தார்” என்று கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jayalalithaa Nirmala Sitharaman Kanimozhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment