தலைமறைவாக உள்ள சர்ச்சை சாமியார் நித்யானந்தா புதியதாக வெளியிட்டுள்ள பரபரப்பு வீடியோவில், தனது மரணத்துக்குப் பிறகு தன்னுடைய சொத்துக்கள் யாருக்கு சேர வேண்டும் என்பது குறித்து உயில் எழுதி வைத்துவிட்டேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சர்ச்சை சாமியார் நித்யானந்தா குஜராத்தில் உள்ள ஒரு ஆசிரமத்தில் நன்கொடை வசூலிப்பதற்காக குழந்தைகளை சட்டவிரோதமாக கடத்தி அடைத்து வைத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு அம்மாநில போலீசார் அவரைத் தேடியதால் நித்யானந்தா தலைமறைவானார். மேலும், நித்யானந்தாவின் ஆசிரமத்தில் இருந்தவர் அவர் மீது பாலியல் புகார் கூறியதைத் தொடர்ந்து அவர் பாலியல் வழக்கிலும் தேடப்பட்டு வருகிறார்.
இதனால், தலைமறைவான நித்யானந்தா கைலாசா தீவில் தனி நாடு உருவாக்கி ஆன்மீக பணிகளை மேற்கொண்டுவருவதாகவும் ஒவ்வொரு நாளும் ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.
போலீசார் நித்யானந்தா எங்கே இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் இண்டர்போல் உதவியை நாடிவருகின்றனர். இதனிடையே அவருக்கு, கர்நாடகா நீதிமன்றம் நீத்யானந்தாவுக்கு பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில், நித்யானந்தா புதியதாக வெளியிட்டுள்ள வீடியோவில், “ என்னுடைய 20 ஆண்டு கால போராட்டத்துக்கு பிறகு கைலாசத்தை கட்டி அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது . வாடிகனைப் போல இந்து மதத்துக்கு என ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்ற எனது ஆசை நிறைவேறிவிட்டது. ஆனால், அது குறித்து
வேறு எந்த தகவல்களையும் தரப்போவது இல்லை.
சில நாடுகளுடன் தூதரக ரீதியிலான உறவுகளும் தொடங்கிவிட்டது. என்னுடைய மரணத்துக்குப் பிறகு எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடையவேண்டும் என்பது குறித்து உயில் எழுதி வைத்துவிட்டேன்.
தமிழகத்துக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான் இனிமேல் தமிழகத்துக்கு வரப்போவது இல்லை. தமிழக ஊடகங்களை பொறுத்தவரை நான் இறந்துவிட்டேன். நான் இறந்துவிட்டால் எனது உடல் பிடதியில் உள்ள ஆசிரமத்தில் மதுரை ஆதீனத்தின் முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும். இந்த ஜீவ சமாதி முறைப்படிதான் என்று அடக்கம் செய்ய வேண்டும் என்று தெளிவாக எழுதிவைத்துவிட்டேன்.
மக்கள் எனக்கு அளிக்கும் எல்லாவிதமான காணிக்கைகளும் திருவண்ணாமலை குரு பரம்பரை, காஞ்சி குருபரம்பரை, திருவண்ணாமலை குருபரம்பரை ஆகிய மூன்று தலைமுறைகளுக்குதான் செல்ல வேண்டும் என்பதை உயில் எழுதி வைத்துள்ளேன். இதுவே எனது கடைசி ஆசை.” என்று கூறியுள்ளார்.
நித்யானந்தா தனது மரணத்துக்குப் பிறகு, சொத்துக்கள் யாருக்கு செல்ல வேண்டும், தனது கடைசி ஆசை ஆகியவற்றைப் பற்றி குறிப்பிட்டுள்ளதால் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.