/tamil-ie/media/media_files/uploads/2020/08/New-Project-2020-08-17T152947.269.jpg)
சர்ச்சை சாமியார் நித்யானந்தா புதிதாக உருவாக்கியுள்ள கைலாசா நாட்டிற்கு தனியாக ரிசர்வ் பேங்க், கரன்ஸியை விநாயகர் சதுர்த்தியில் வெளியாகும் என்று விஸ்வரூப அறிவிப்பை அறிவித்துள்ளார். அதற்குப் பிறகு தன்னை ஆண்டி என்றாலும் ஓகே அதிபர் என்றாலும் ஓகே என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நித்யானந்தாவின் குஜராத் ஆசிரமத்தில் குழந்தைகளை சட்டவிரோதமாக அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் குஜராத் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், நித்யானந்தா மீது கடத்தல், பாலியல் புகார், என பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு போலீஸ் அவரை கைது செய்ய தேடத் தொடங்கியது. அவர் தலைமறைவானார்.
சில நாட்களில், அவர் கைலாசா என்ற புதிய நாட்டை உருவாக்கி இருப்பதாக அறிவித்தார். இப்படி தனது அதிரடி அறிவிப்பின் மூலம் சர்ச்சைக்கு மேல் சர்ச்சைகளை உருவாக்கினார் நித்யானந்தா. நித்யானந்தா உருவாக்கியுள்ள கைலாசா நாடு ஈக்வடார் நாட்டில் உள்ள ஒரு தீவு என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நித்யானந்தா தன்னுடைய யூடியூப் சேனலில் தான் உருவாக்கியுள்ள கைலாசா நாட்டுக்கு என தனியாக ரிசர்வ் வங்கி, கரன்சியை வருகிற விநாயகர் சதுர்த்தி அன்று ஆகஸ்ட் 22ம் தேதி சட்டப்பூர்வமாக முறையாக அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்தார். அதோடு, நாட்டிற்கு என பொருளாதாரக் கொள்கைகளும் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நித்யானந்தா தனது யூடியூப் சேனலில் பேசுகையில், விக்கி பீடியா போல, தன்னைப் பற்றி அறிந்துகொள்ள நித்தியானந்தாபீடியா என்ற ஒன்றை உருவாக்கி இருப்பதாகவும் கூறி உள்ளார். மேலும், தன்னை ஆண்டி என்றாலும் ஓகே கைலாசாவின் அதிபர் என்றாலும் ஓகே என்று நகைச்சுவையாக பேசியிருக்கிறார்.
சர்ச்சைய சாமியார் நித்யானந்தா விநாயகர் சதுர்த்தி அன்று விஸ்வரூபம் எடுக்கும் விதமாக, கைலாசா நாட்டிற்கு தனி ரிசர்வ் பேங்க் மற்றும் தனி கரன்சி அறிமுகம் செய்ய உள்ள நிலையில், தன்னை ஆண்டி என்றாலும் சரி அதிபர் என்றாலும் சரி என்று கூறியிருப்பது அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியையும் நகைச்சுவையையும் ஒரு சேர ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.