Nivar Cyclone Status Live: தீவிர புயலாக வலுவிழந்த நிவர் புயல் கரையை கடந்துள்ளது. புயல் கரையை கடந்த நேரத்தில் புதுச்சேரி உள்பட சில பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழையும் கொட்டி தீர்த்தது.
தென் மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக உருவெடுத்தது. இந்தப் புயலுக்கு நிவர் என பெயரிடப்பட்டது. நிவர் என்றால், வருமுன் காப்பது என அர்த்தம். இந்தப் புயல் காரைக்காலுக்கும் தமிழகத்தின் மாமல்லபுரத்திற்கும் இடையே 25 ஆம் தேதி இரவு 11.30 மணியில் தொடங்கி 26ஆம் தேதி அதிகாலை 2.30 மணி வரை கரையைக் கடந்தது.
நிவர் புயல் தொடர்பான செய்திகளை ஆங்கிலத்தில் படிப்பதற்கு: Nivar Cyclone
சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், தமிழகத்தின் கடற்கரையோர கிழக்கு மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது. அதிகாரிகள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு உள்ளுர் இடையே 24.11.2020 மதியம் 1.00 மணி முதல் பேருந்து போக்குவரத்து மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் முன் எச்சரிக்கை, நிவர் புயல் பாதை, நிவர் புயலால் மழை பெய்யும் இடங்கள் உள்ளிட்ட லேட்டஸ்ட் தகவல்களை இந்த லைவ் ப்ளாக்கில் பார்க்கலாம்.
chennai weather forecast: எந்தெந்த மாவட்டங்களில் கன மழை?
நிவர் புயலால் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டது. அதன்படி, நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய அதிக கனமழை பெய்யும்.
சென்னை, காஞ்சீபுரம், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழை முதல் மிக அதிக கனமழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
இன்று நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதி கன மழையும், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், செங்கல்பட்டு ,காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஈரோடு, சேலம், நாமக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Web Title:Nivar cyclone tamil news live nivar cyclone status chennai weather forecast
தெற்கு வங்கக் கடலில் வரும் 29-ம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த தாழ்வு நிலை மேலும் வலுவடைந்து மேற்கு திசை நோக்கி நகரக்கூடும் என்றும் ஆய்வு மையம் தெரிவித்தது.
நிவர் புயலால் சென்னையில் 387 மரங்கள் சாய்ந்துள்ளதாகவும், அதில் 350 மரங்கள் பத்திரமாக அகற்றப்பட்டு விட்டதாகவும் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.
நிவர்புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர், குப்பைகளை விரைந்து அகற்றி கிருமிநாசினி தெளிக்கவும், மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கவும் துரித நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு துணை முதல்வர் ஒ. பன்னீர்செல்வம் அறிவுறுத்தினார்.
நிவர் புயலால் புதுச்சேரியில் ரூ.400 கோடி அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள மோர்தானா அணையின் இரண்டு கால்வாய்களிலும் நாளை காலை முதல் பாசனத்திற்காக நீர் திறந்து விடப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார்.
சென்னை(மே) மாவட்டம்-ஆயிரம் விளக்கு(கி) பகுதி-மழையால் பாதித்த பச்சையம்மன் சாலை மக்களுக்கு உதயநிதி ஸ்டாலின் உணவு-பால்-பிரெட் வழங்கினார் .
நிவர் புயல்: விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மரக்காணம் பகுதியிலுள்ள மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ரவிக்குமார் எம்.பி
கேட்டுக்கொண்டுள்ளார்.
பாலாற்றில் 10,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிக்குமார் அறிவுறுத்தினார்.
சென்னை சைதாபேட்டையில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்களின் குறைகளை கமல்ஹாசன் கேட்டறிந்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை விட, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
முதல்வர் பழனிசாமி, “நிவர் புயலால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நிவர் புயலை எதிர்கொள்ள முழுவீச்சில் தயாராக இருந்தோம். மாவட்ட ஆட்சியர்களுக்கும் முழுமையான அறிவுரை வழங்கப்பட்டது. கடலூரில் சேதம் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. சுமார் 2.3 லட்சம் பேர் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். பயிர்க் காப்பீடு செய்திருந்தால் இழப்பீடும் பெற்றுத்தரப்படும்.” என்று கூறினார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை சைதாப்பேட்டையில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், வரும் 29ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிய தாழ்வு நிலையானது, தென்தமிழகத்திற்கு மேற்கு நோக்கி நகர வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. போக்குவரத்து தடைப்பட்ட காரணத்தினால் 30 கிராமங்கள் துண்டிக்கப்பட்டன.
செம்பரப்பாக்கம் ஏரியில் வெளியேற்றப்படும் உபரி நீர் நிறுத்தப்பட்டால் வராதராஜபுரம் பகுதியை ஒட்டியுள்ள ராயப்பா நகர் மற்றும் மகா லக்ஷ்மி நகர் ஆகிய இடங்களில் தேங்கியுள்ள மழை நீர் வடிந்து விடும் என மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்தார்.
புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மீட்புப் பணிகளில் ஈடுபட இந்திய கடலோரக் காவல்படையின் 15 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கடலோர காவல்படை தெரிவித்தது.
இதேபோல் மீட்புப் பணியில் ஈடுபட தேசிய பேரிடர் மீட்புப் படையின் 25 குழுக்கள் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரபிரதேச மாநிலங்களின் கடலோர பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இதில் 15 குழுக்கள் தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையத்தில் நிவர் புயல் காரணமாக நேற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவைகள் இன்று மீண்டும் தொடங்கியது.
சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக, பெருமளவு சேதங்கள் தடுக்கப்பட்டதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
கடலூரில் நிவர் புயலால் நீர் சூழ்ந்த பகுதிகளின் மீட்பு பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாரிகளுடன் பார்வையிட்டார்.
சென்னையில் நிவர் புயலால் நீர் சூழ்ந்த பகுதிகளின் மீட்பு பணிகளை துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் இன்று அதிகாரிகளுடன் பார்வையிட்டார்.
"2015 பெரு வெள்ளத்திலிருந்து அதிமுக அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார். நிவர் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5000 ரொக்கமாக வழங்க வேண்டும். வேளாண் விளைபொருள் இழப்பீட்டுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். வீடுகளை இழந்தவர்களுக்கு புதிதாக அரசே வீடு கட்டித் தர வேண்டும், என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூருவுக்கும், ஆலப்புழாவுக்கும் வழக்கம்போல் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நிவர் புயல் தாக்கம் காரணமாக சென்னையில் மெரினா பட்டினம்பாக்கத்தில் கருப்பு நிறத்தில் கடல் அலைகள். மழை, வெள்ளத்தால் கடலில் அதிக அளவு கழிவுப் பொருட்கள் கலந்ததால் அலைகள் கருப்பு நிறமாக காட்சி அளிக்கின்றன.
கரையை கடந்த நிவர் தீவிர புயலில் இருந்து புயலாக வலுவிழந்தது. 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், பின்னர் தாழ்வு மண்டலம் என மேலும் வலுவிழக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் புயலால் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுக்கும் பணிகள் துவங்கியது, விரைவில் நிவாரணம் குறித்து அறிவிக்கப்படும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த 36 மணி நேரத்தில் 23 செ.மீ. மழை பெய்துள்ளதாக, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியில் இருந்து விநாடிக்கு 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக சென்னையில் நேற்ரு மாலை நிறுத்தப்பட்ட மெட்ரோ ரயில் சேவை இன்று மதியம் 12 மணி முதல் மீண்டும் தொடங்கும் என அறிவிப்பு,
நிவர் புயல் பாதிப்புகள் குறித்து சென்னை தரமணி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்தார். ஓபிஎஸ் உடன் அமைச்சர்களும் உடன் இருந்தனர்.
இன்று நண்பகல் 12 மணி முதல் அரசு பேருந்துகள் இயங்கும் .நிவர் புயல் கரையை கடந்த நிலையில் அரசு உத்தரவு . முன்னெச்சரிக்கையாக கடந்த 24ம் தேதி நிறுத்தப்பட்ட பேருந்து சேவைகள் மீண்டும் இயக்கம். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை மற்றும் புதுக்கோட்டை என 7 மாவட்டங்களில் மீண்டும் பேருந்து சேவை தொடக்கம்
நிவர் புயல் பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டறிந்தார் . புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியிடமும், புயல் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார் . தேவையான உதவிகளை செய்வதாகவும் உறுதியளித்தார் அமித்ஷா.
சென்னையில் மின் இணைப்பு நிறுத்தி வைக்கப்பட்ட 390 இடங்களில் மழைநீர் வடிய வடிய மின் இணைப்பு வழங்கப்படும் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் வருகைக்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும் என போக்குவரத்துறை தகவல்
நிவர் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் பெரிய பாதிப்புகள் இல்லை என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய பிற்பகல் 2.30க்கு கடலூர் செல்கிறார் முதல்வர் பழனிசாமி. முதல்வருடன் அமைச்சர்களும் உடன் செல்கின்றனர்.
சென்னை சைதாப்பேட்டையில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
சென்னை நகரின் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மயிலாப்பூர், எம்.கி.ஆர் நகர், வளசரவாக்கம், ஆழ்வார்பேட்டை, வேளச்சேரி, புரசைவாக்கம், கிண்டி, மடிப்பாகம் என நகரின் முக்கிய பகுதிகள் அனைத்திலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது
நவ.25ம் தேதி காலை 8.30 மணி முதல் இன்று (நவ.26) அதிகாலை 3.30 மணி வரை பதிவாகியுள்ள மழையின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி - 26.செ.மீ கடலூர் - 25 செ.மீ சென்னை - 8 செ.மீ காரைக்கால் - 9 செ.மீ நாகப்பட்டினம் - 6 செ.மீ
புயல் சேத விவரங்களை முதல்வர் பழனிசாமி பின்பு வெளியிடுவார். நிவர் புயல் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் விமான சேவை காலை 9 மணி முதல் துவங்கும் சென்னை விமான நிலையம் செயல்பட தொடங்கியது காலை 6 மணி முதல் டெல்லி, அந்தமான், அகமதாபாத் போன்ற நகரங்களுக்கு செல்ல பயணிகள் வந்தனர்
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு விநாடிக்கு 5,016 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு விநாடிக்கு 9,300 அடியில் இருந்து 5,016 கன அடியாக குறைப்பு .
நிவர் புயல் கரையை கடந்த நிலையில் தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மரக்காணம், ஆரணி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது
அதி தீவிர புயலான நிவர் கரையைக் கடக்கும்போது தீவிர புயலாக வலுவிழந்தது. இதனால் காற்றின் வேகம் எதிர்பார்த்தைவிட 110 முதல் 120 கிமீ அளவில் இருந்தது. எனினும் முழுமையான சேத விவரங்கள் காலையில் தெரியவரும்.
சேத விவரங்கள் குறித்தும், நிவாரணம் குறித்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவிப்பார் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
நிவர் புயல் முழுமையாக கரையைக் கடந்ததாக வியாழக்கிழமை அதிகாலையில் வருவாய் மற்றும் பேரிடர் தடுப்புத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குறிப்பிட்டார். நிவர் அதி தீவிர புயல், தீவிர புயலாக வலுவிழந்து கரையை கடந்ததாக அவர் தெரிவித்தார்.
புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் பகுதியில் 11.30 முதல் 2.30 மணி வரை முழுவதுமாக புயல் கரையைக் கடந்தது.
தமிழகத்தை மிரட்டிய நிவர் புயல், 25 ஆம் தேதி (புதன்கிழமை) இரவு 11.30 மணியில் தொடங்கி 26ஆம் தேதி (வியாழக் கிழமை) அதிகாலை 2.30 மணி வரை கரையைக் கடந்தது. அப்போது பலத்த மழை கொட்டியது. காற்று பலமாக வீசியது.
நிவர் புயல் புதுச்சேரி - மரக்காணம் இடையே கரையைக் கடந்துகொண்டிருக்கிறது. நிவர் புயலின் மையப்பகுடி கரையை நெருங்கி வருகிறது. புயல் முழுவதுமாக கரையைக் கடக்க அதிகாலை 3 மணி ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, கடற்கரையில் கன மழை பெய்து வருகிறது.
புதுச்சேரி - மரக்காணம் இடையே நிவர் புயல் 15 கி.மீ வேகத்தில் கரையைக் கடக்கிறது. புயல் முழுமையாக கரையைக் கடக்க அதிகாலை 3 ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 120 கி.மீ வேகத்தில் காற்று வீசுவதுடன் கனமழை பெய்து வருகிறது.
சென்னை பெரம்பர்லூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர் உட்பட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மிதமான மழை தொடரும்.ன்திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் இடியுடன் மிதமான மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடலூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த 3 மனி நேரத்தில் இடியுடன் கனமழை பெய்யக்கூடும். திருவண்ணாமலை, விழுபுரம், நாகை, மயிலாடுதுறை, அரியலூர் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் கரையைக் கடப்பதால் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிவர் புயலின் வெளிச்சுவர் புதுச்சேரி - மரக்காணம் இடையே தற்போது கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளது. முழுமையாக புயல் கரையைக் கடப்பதற்கு அதிகாலை 3 மணி ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரிக்கு வடக்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் நிவர் அதி தீவிர புயலாக கரையை கடக்க தொடங்கியது.புயல் முழுவதுமாக கரையைக் கடப்பதற்கு அதிகாலை 3 மணி ஆகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாமல்லபுரம் முதல் புதுச்சேரி வரை பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
நிவர் புயலின் வெளிச்சுவர் புதுச்சேரி அருகே கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளதால் புதுச்சேரி, கடலூரில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.