'பீதியுடன் பதற்றமான சூழல்': போராட்டத்தை வேறு இடத்துக்கு மாற்ற என்.எல்.சி. கடிதம்
என்.எல்.சி. நிறுவனத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த தொழிலாளர்களை வேறு இடத்திற்கு மாற்ற கோரி கடலூர் மாவட்ட காவல்துறைக்கு என்.எல்.சி. நிர்வாகம் கடிதம் அனுப்பியுள்ளது.
நெய்வேலி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிற்சங்க தொழிலாளர்கள், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 26ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 8-வது நாளாக இன்றும் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. தொழிலாளர்கள் இரவு-பகல் பாராமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisment
இந்நிலையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுடன் கோட்டாட்சியர் தலைமையில் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சங்க நிர்வாகிகள், என்.எல்.சி. நிர்வாகத்தினர், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது.
என்.எல்.சி. கடிதம்
இந்த நிலையில், என்.எல்.சி. நிறுவனத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த தொழிலாளர்களை வேறு இடத்திற்கு மாற்ற கோரி கடலூர் மாவட்ட காவல்துறைக்கு என்.எல்.சி. நிர்வாகம் கடிதம் அனுப்பியுள்ளது. மேலும், தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக அன்றாட செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், என்.எல்.சி. நிறுவனம் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்.எல்.சி. நிறுவனத்தின் தலைமை அலுவகத்திற்கு மத்திய பாதுகாப்பு படையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இருப்பினும், போராட்டம் காரணமாக பீதி மற்றும் பதற்றமான சூழ்நிலை உருவாகிறது என்று என்.எல்.சி. நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இதன் காரணமாக தலைமை அலுவகம் எப்போது தடை செய்யப்பட்ட பகுதியாகவே இருக்கிறது. அந்த தடை செய்யப்பட்டுள்ள பகுதியில் போராட்டம் நடைபெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் என்.எல்.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொழிலாளர்கள் வேறு இடத்தில் போராட்டம் நடத்த என்.எல்.சி. நிறுவனமே 4 இடங்களை ஒதுக்குவதாக கூறியுள்ளது. அவை நெய்வேலி காமராஜர் மைதானம், பி.பி.எஸ் மைதானம், வளைவு பாலம் மற்றும் வட்டம் 3-க்கு அருகேயுள்ள மைதானம் ஆகிய இடங்கள் ஆகும் என்றும் கூறியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil