புதுச்சேரி மங்கலம் தொகுதிக்குட்பட்ட பெருங்களூர் பேட், தனத்துமோடு உள்ளிட்ட கிராமங்களில் 1500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊர்களுக்கு தேசிய நெடுஞ்சாலையை தாண்டி சுடுகாடு உள்ளது. இறப்பவர்கள் அங்கு உடலை எடுத்து சென்று அடக்கம் செய்வார்கள்.
ஆனால் தற்போது தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டதன் காரணமாக சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றி பின்பு சுடுகாட்டு பகுதிக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.
அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், அரசு இதுவரை எந்த நடவடிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் பெருங்களூர் பகுதியில் இன்று ஒருவர் இறந்துள்ளார். அவரை அடக்கம் செய்வதற்காக உடலை உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சுடுகாட்டுக்கு எடுத்து வந்தவர்கள் இந்த சாலை துண்டிக்கப்பட்டதை கண்டித்தும், சாலையை உருவாக்கித் தர வேண்டும் என வலியுறுத்தி உடலுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் விழுப்புரம்- நாகப்பட்டினம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அப்பகுதி தாசில்தார் சேகர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் தேசிய நெடுஞ்சாலைகள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.