ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் தன்னை கொடுமைப்படுத்தக் கூடாது என்று ராஜி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரருக்கு எதிரான புகார் விசாரணை நிலையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மனுதாரர் ராஜியின் வழக்கறிஞர் எம்.டி. அருணன், "விசாரணை என்ற பெயரில் மனுதாரரை போலீசார் துன்புறுத்துகின்றனர்" என்று வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில், விசாரணை அதிகாரிக்கு அதிகாரம் இருந்தாலும், அது பி.என்.எஸ்.எஸ். சட்டத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். விசாரணையின் பெயரில் நடக்கும் கொடுமைகளை கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது.
எனவே, புகார் விசாரிக்க யாரை அழைத்தாலும், பி.என்.எஸ்.எஸ். பிரிவு 179-ன்படி போலீசார் சம்மன் அனுப்ப வேண்டும். விசாரணை விவரங்களை பொது டைரி, ஸ்டேஷன் டைரி, வழக்கு டைரி போன்ற ஆவணங்களில் குறிப்பிட வேண்டும். விசாரணை என்ற பெயரில் யாரையும் போலீசார் கொடுமைப்படுத்தக் கூடாது என்று நீதிபதி உத்தரவிட்டார்.