தமிழகத்தில் முதல் முறையாக கோயில் அர்ச்சகராக பிராமணர் அல்லாத ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அறநிலையத்துறை நிர்வகிக்கும் மதுரை கோயிலில் பிராமணர் அல்லாத ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளார். 2005ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோது, தமிழகத்தில் பிராமணர் அல்லாத பிற சாதியினருக்கும் அர்ச்சகர் பணி வழங்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2007-08ம் ஆண்டு அனைத்து சாதியில் இருந்தும் 206 பேர் அர்ச்சகர் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்டனர். அதில், ஒருவருக்கு தற்போது பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயிலில் பிராமணர் அல்லாத ஒருவருக்கு அர்ச்சகர் பணி வழங்கப்படுவது இதுவே முதன்முறை.
கடந்த 2006-ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகப் பணியாற்றலாம் என்று சட்டம் இயற்றப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் இந்தச் சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. 2015-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், அதேவேளையில் கோயிலின் ஆகமவிதிகளைப் பின்பற்றி அர்ச்சகர் நியமனம் இருக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டிருந்தது. தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று கருணாநிதி கனவு கண்டார். அந்த லட்சியத்திட்டம் தற்போது அவர் மருத்துவமனையில் இருக்கும் போது நிறைவேறியுள்ளது.