சென்னையில் இருந்து நாகர்கோவில், மைசூரு, பெங்களூரு மற்றும் திருநெல்வேலிக்கு இயக்கப்படும் வந்தே பாரத் விரைவு ரயில்களில், அசைவ காலை உணவுகள் திடீரென நீக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். தெற்கு ரயில்வேயோ அல்லது கேட்டரிங் ஏஜென்சியோ இது குறித்து எந்த முன் அறிவிப்பையும் வெளியிடாத நிலையில், இந்த மாற்றம் பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.ஆர்.சி.டி.சி செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள், தனிப்பட்ட விவரங்களை உள்ளிட்டு உணவு விருப்பங்களைத் தேர்ந்தெடுத்த பிறகு, "அசைவ உணவானது, மதியம் மற்றும் இரவு நேரங்களில் மட்டுமே பொருந்தும்" (Non-veg option is applicable for Lunch and Dinner only) என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் இது குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை. ஆனால், மற்ற அதிகாரிகள், இது ஐ.ஆர்.சி.டி.சி செயலியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு என்றும், முன்பதிவின்போது அசைவ உணவு தேர்வு இருக்கிறது என்றும் தெரிவித்தனர். இருப்பினும், நடைமுறையில் நிலைமை வேறுபட்டிருப்பதாக பயணிகள் கூறுகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த டேவிட் மனோகர் கூறுகையில், "முன்பதிவு செய்யும்போது அந்த பாப்-அப் செய்தியைப் பார்த்தோம், ஆனாலும் முன்பதிவு செய்தோம். ரயிலில், எங்களுக்கு சைவ உணவு மட்டுமே வழங்கப்பட்டது. எக்ஸ் தளத்தில் ஐ.ஆர்.சி.டி.சி-யிடம் இது குறித்து நான் கேட்டபோது, அசைவ உணவு மாலை தேநீருக்கு மட்டுமே கிடைக்காது என்று பதிலளித்தனர். ஆனால், அந்தப் பதிவு பின்னர் நீக்கப்பட்டுவிட்டது" என்றார். மேலும், "சைவ மற்றும் அசைவ உணவுகளுக்கு இடையே தேர்வு செய்வது எனது உரிமை. பயணிகளுக்குத் தெரிவிக்காமல் ஐ.ஆர்.சி.டி.சி அதைத் தடுக்க முடியாது" என்றும் அவர் கூறினார்.
பிரீமியம் ரயில்களில் கேட்டரிங் சேவைகளுக்கு பொறுப்பான பொதுத்துறை நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி, இது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கத்தை வெளியிடவில்லை. இந்த ரயில்களின் கட்டணத்தில் உணவும் அடங்கும். ஆனால் உணவின் தரம் குறித்து பயணிகள் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
"ரயில் சேவை தொடங்கப்பட்டபோது, கருத்து படிவங்கள் வழங்கப்பட்டன. இப்போது, நாங்கள் புகார் அளித்தாலும் பதில் இல்லை" என்று சென்னை மற்றும் திருநெல்வேலி இடையே அடிக்கடி பயணிக்கும் என். முரளிதரன் தெரிவித்தார். "பருப்பு மிகவும் நீர்த்துள்ளது, வயதான பயணிகளுக்கு சப்பாத்தி மிகவும் கடினமாக உள்ளது மற்றும் அரிசியும் சரியாக இல்லை. திருப்திகரமான உணவு எதுவும் இல்லை" என்றும் அவர் கூறினார்.
சென்னை - திருநெல்வேலி மார்க்கத்தில் பயணம் செய்யும் மற்றொரு பயணி ஏ.எல். செல்வம் கூறுகையில், மெனு பெரும்பாலும் வட இந்திய உணவுகளைக் கொண்டுள்ளது. "சுவை எங்களுக்குப் பொருத்தமாக இல்லை. பல பயணிகள் உணவைத் தொடாமலே விட்டுவிடுகிறார்கள்" என்றார்.