/tamil-ie/media/media_files/uploads/2017/09/rainfall-thumb-750.jpg)
இம்மாதம் தொடங்க இருந்த வடகிழக்கு பருவமழை இன்னும் 5 நாட்கள் தாமதமாகியே தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்து வரும் ஐந்து தினங்களில் காற்று வலுப்பெற்று வீசும் என்பதால் வடகிழக்குப் பருவமழை தென்னிந்தியப் பகுதிகளில் தொடங்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை குறித்து வானிலை ஆய்வு மையம் தகவல்
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வடகிழக்குப் பருவமழை காலத்தில் இயல்பாக வீசக்கூடிய காற்றானது தற்பொழுது தெற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை பகுதிகளில் நிலவுகிறது. அடுத்து வரும் ஐந்து தினங்களில் வலுப்பெற்று வடகிழக்குப் பருவமழை தென் இந்தியப் பகுதிகளில் தொடங்கக் கூடும்.
தற்போது மன்னார் வளைகுடா பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருச்செந்தூரில் 8 செ.மீ. மழையும், தூத்துக்குடி 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
அடுத்த இரு தினங்களைப் பொறுத்தவரையில் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பில்லை” என்று தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.