வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட இலங்கை பகுதிகளில் நிலவுகிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு - புதுச்சேரி கடற்கரை பகுதியில் கரையை கடக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.
Advertisment
இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு விடிய விடிய தொடர்ந்து இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. கனமழை காரணமாக பல இடங்களில் மழை நீர் தேங்கி இருக்கிறது. சென்னையை ஒட்டிய திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் கனமழை பெய்தது.
குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணியிலிருந்து இரவு 12 மணி வரை தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்தது. சீர்காழி அருகே கதிராமங்கலம் கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெல் பயிர்கள் அனைத்தும் மழை நீரில் மூழ்கியுள்ளது. இந்தப் பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால் தூர்வாரி இரண்டு வருடங்கள் ஆன நிலையில் தற்போது மழை நீரை வடிய வைக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 40 செ.மீ க்கு மேல் மழை பதிவானது.
Semma rains in ECR belt in Kelambakkam, Kovalam, Thiruporur Mutukkukadu and line of very intense clouds in ECR south of Chennai
(கேளம்பாக்கம், கோவளம், திருப்போரூர் முட்டுக்காடு பகுதிகளில் உள்ள ஈசிஆர் பெல்ட்டில் கனமழை மற்றும் சென்னைக்கு தெற்கே ஈசிஆர் பகுதியில் மேகங்கள் சூழ்ந்துள்ளன- தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான்)
சீர்காழியில் கடந்த 24 மணி நேரத்தில் 43.6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கொள்ளிடத்தில் 31.5 செ.மீ., சிதம்பரத்தில் 30.7 செ.மீ., மழை பதிவானது. செம்பனார்கோயில் -24.2 செ.மீ, பொறையார் - 18.3 செ.மீ, மயிலாடுதுறை - 16 செ.மீ மழை பதிவு ஆகியுள்ளது.
விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும் விடிய விடிய கனமழை பெய்தது. மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.
இதற்கிடையே, கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 1510 கன அடி நீர் வரத்து உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கடந்த 10 நாட்களாக வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடற்கரை பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இன்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“