வடகிழக்கு பருவமழை சீசனால், தமிழகத்தின் பலபகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக, ஆங்காங்கே மின்தடை, பழுது உள்ளிட்டவை தொடர்கதையாக மாறியுள்ளன.
இந்நிலையில், மின்தடை குறித்த புகார்களுக்கு 1912 என்ற டோல் ப்ரீ எண் மட்டுமல்லாது, மேலும் புதிய எண்களை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ( Tangedco) அறிவித்துள்ளது. அதன்படி, 2852 4422 மற்றும் 2852 1109 என்ற எண்களில் தொடர்பு கொண்டு மின்தடை குறித்த புகார்களை அளிக்கலாம். 94458 50811 என்ற வாட்சப் எண்ணிலும் புகார்களை பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்கள் மட்டுமல்லாது, மின்துறை அமைச்சரின் முகாம் அலுவலக எண் என்று 2494 9525 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த எண், 24 மணிநேரமும், வாரத்தின் 7 நாட்களும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை, மின்துறை அமைச்சர் தங்கமணி, Tangedco தலைவர் விக்ரம் கபூர் மற்றும் அதிகாரிகள் அளவிலான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களின் அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர்.
மழை சீசன் என்பதால், ஆங்காங்கே மழைநீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்வதுடன், ஷாக் அடித்து மரணம் ஏற்பட்டால் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மக்களிடமிருந்து வரும் புகார்களுக்கு உடனடியாக தீர்வு ஏற்படுத்தித்தர வேண்டும் என்று மின்துறை அமைச்சர், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.