சென்னை மதுரவாயிலில், கட்டுமான பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னையில், தமிழக தொழிலாளிகளை தாக்கிய வட மாநில தொழிலாளிகள் இரும்பு கம்பியால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மூன்று வட மாநில தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மதுரவாயலில் கூவம் ஆறு இடையே மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. தனியார் நிறுவனம் சார்பில் நடைபெற்று வரும் இந்த பணியில்,மயிலாடுதுறையை சேர்ந்த வீரையன் (36) என்பவர் போரிங் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். மேம்பால பணிகள் நடைபெறும் இடத்தில் தமிழர்களும் வடமாநிலத்தவர்களும் ஒன்றாக தங்கி வேலை பார்த்து வருகின்றனர். கடந்த மார்ச் 2ம் தேதி இரவு பணி முடிந்து வீரையன் தூங்க சென்ற போது, வட மாநில தொழிலாளியான ஜீதுராம் நாயக் என்பவர் வீரையன் பாயை பயன்படுத்தி தூங்கியுள்ளார்.
இதை பார்த்த வீரையன், தனது பாயை தருமாறு ஜீதுராமிடம் கேட்டபோது, அவரை தகாத வார்த்தைகளால் திட்டிய ஜீதுராம் தாக்கியுள்ளார். ஜீதுராமுடன் இணைந்து மேலும் இரண்டு வட மாநில தொழிலாளர்களும் இரும்பு கம்பியால் வீரையனை தாக்கியுள்ளனர். இதைக் கண்டு தமிழகத் தொழிலாளிகளான கங்காதரன் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் தடுத்துவிட சென்றுள்ளனர். அவர்களையும் வட மாநில தொழிலாளிகள் மூவரும் சேர்ந்து தாக்கி விட்டு, கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த வீரையன் உட்பட 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக வீரையன் மதுரவாயல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், தப்பி சென்ற மூன்று வட மாநில தொழிலாளர்களையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஜீதுராம் நாயக் (32), கேதார் ராவுட் (32) மற்றும் சானியா நாயக் (28) என்பது தெரியவந்தது. பின்னர் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.