தென்னிந்திய நடிகர் சங்கம் முறையாக செயல்படவில்லை எனக்கூறி, இந்த விவகாரத்தில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், செயலாளர் விஷால் உள்ளிட்டோருக்கு வணிக வரிகள் மற்றும் பதிவுத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்க தலைவர், செயலாளர், உறுப்பினர்கள் உள்ளிட்டோரின் பதவிக்காலம் கடந்த ஆண்டு முடிவடைந்தது. இதனையடுத்து தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள், வரும் 15ம் தேதி எண்ணப்பட உள்ளன. இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் முறையாக செயல்படவில்லை என்றும், குறைகள் எதுவும் தெரிவிக்க முடியவில்லை எனவும் அச்சங்கத்தின் உறுப்பினர்களான எம்.சித்ரலேகா, எம்.ஆர்.பி.சந்தானம் ஆகியோர் வணிக வரிகள் மற்றும் பதிவுத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
நடிகர் சங்க கட்டடத்தின் பணிகளை யாரும் கண்காணிக்கவில்லை என்றும் புகாரில் குறிப்பிட்டிருந்தனர். இதனையடுத்து தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயல்பாடுகளை கவனிக்க சிறப்பு அதிகாரியை ஏன் நியமிக்கக்கூடாது என கேள்வி எழுப்பியுள்ள பதிவுத்துறை அதிகாரிகள், இது குறித்து நாசர், பொன்வண்ணன், விஷால், கார்த்தி ஆகியோர் 30 நாட்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.