2025-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்டது. அதில் குருப்-1 தேர்வு, குருப்-4 தேர்வு, குருப் 2 மற்றும் 2 ஏ தேர்வு உள்பட மொத்தம் 7 போட்டித்தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றன. அதன்படி குருப்-1 தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் 1-ம் தேதியும், அதிக எண்ணிக்கையிலான தேர்வர்கள் பங்கேற்கக்கூடிய ஒருங்கிணைந்த குருப்-4 தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் 25-ம் தேதியும் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. வழக்கமாக வருடாந்திர தேர்வு அட்டவணையில் வெளியிடப்படும்போதே காலியிடங்களின் எண்ணிக்கையும் தோராயமாக தெரிவிக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு அதுபோன்று காலியிடங்களின் விவரம் குறிப்பிடப்படவில்லை. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது :
அனைத்து தேர்வுகளும் குறிப்பிட்ட தேதியில் அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வு நடத்தி தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும். அந்த வகையில், குருப்-1 தேர்வு மற்றும் குருப்-4 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் ஏப்ரல் மாதம் திட்டமிட்டபடி வெளியிடப்படும். அரசு துறைகளிடமிருந்து காலிப்பணியிடங்களின் விவரம் மார்ச் இறுதியில் எங்களுக்கு கிடைக்கும். தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும்போது காலிப்பணியிடங்களின் முழுவிவரமும் அதில் குறிப்பிடப்படும் என்றார்.
தேர்வு எழுதுவோரின் வசதிக்காக விடைத்தாள் நடைமுறையை எளிமைப்படுத்தியுள்ளோம். இந்த ஆண்டு முதல் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும் இந்த புதிய நடைமுறை பின்பற்றப்படும். எனவே, விடைத்தாள் பக்கத்தை தேர்வர்கள் எந்தவிதமான சந்தேகமோ, குழப்பமோ இல்லாமல் மிக எளிதாக பூர்த்தி செய்ய முடியும். தேர்வர்கள் எளிதாக விடையளிக்கும் வகையில் விடைத்தாள் நடைமுறை அமைந்திருக்கும். தேர்வு முடிவுகளை விரைவாகவும் அதேநேரத்தில் சிறு தவறுகூட இல்லாமல் நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் டி.என்.பி.எஸ்.சி. உறுதியாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.