தமிழ்நாட்டில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான (என்.ஆர்.ஐ) ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ் சேர்வதற்கு, 6 மாணவர்கள் போலி ஆவணங்களைக் கொடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் என்.ஆர்.ஐ ஒதுக்கீட்டில் போலி ஆவணங்களைக் கொடுத்து எம்.பி.பி.எஸ் சேர்ந்த 3 பேர்களின் எம்.பி.பி.எஸ் சேர்க்கையை ரத்து செய்து மருத்துவக் கல்வி இயக்குநரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான (என்.ஆர்.ஐ) ஒதுக்கீட்டில், தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு 6 மாணவர்கள் போலி ஆவணங்களைக் கொடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த 6 மாணவர்களில் 3 பேர் தூதரக சான்றிதழை போலியாக கொடுத்து எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்பில் சேர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. போலி ஆவணங்களை கொடுத்து மருத்துவ படிப்பில் சேர்ந்த 3 மாணவர்களின் மருத்துவப் படிப்பு சேர்க்கையை ரத்து செய்து, அந்த 3 இடங்கள் காலியானதாக அறிவித்து மருத்துவக் கல்வி இயக்குநரகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இவ்வாறு முறைகேடாக போலி ஆவணங்கள் கொடுத்து மருத்துவ படிப்பில் சேர்ந்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரத்து செய்யப்பட்ட 3 எம்.பி.பி.எஸ் இடங்கள் சிறப்பு கலந்தாய்வில் சேர்க்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக் குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்று வருகின்றன. எந்த விதமான முறைகேடுகளும் அதில் நடக்காத வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து வருகிறது.
மருத்துவ மாணவர் சேர்க்கையின் ஒருபகுதியாக மாணவர்களின் சான்றிதழ்களை ஆய்வுக்குட்படுத்தி சரிபார்ப்பது வழக்கம். அவ்வாறு ஆவணங்களின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ததில் நடப்பாண்டில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்திருந்த 6 பேரின் தூதரக சான்றிதழ்கள் போலியானவை என்பது கண்டறியப்பட்டது.
அதில், 3 பேர் எம்.பி.பி.எஸ் இடங்களுக்கான ஒதுக்கீடு பெற்றவர்களாவர். இதையடுத்து 6 பேரும் மருத்துவக் கலந்தாய்வில் இனி பங்கேற்பதற்கு தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமன்றி, அவர்களில் 3 பேருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட எம்.பி.பி.எஸ் இடங்களும் ரத்து செய்யப்படுகின்றன.
அந்த இடங்கள், வரும் 25-ம் தேதி தொடங்க உள்ள சிறப்பு ஸ்டே வேகன்சி கலந்தாய்வில் காலியிடங்களாக சேர்க்கப்படும். போலிச் சான்றிதழ் அளித்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது” என மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக் குழு தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“