திருச்சியில் நாம் தமிழர் கட்சியில் புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பா.ஜ.க.,வுக்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம், இஸ்லாமியர்களை எதிர்ப்பதை விட அவர்கள் வேறு என்ன செய்திருக்கிறார்கள். திருப்போரூர் கோயில் உண்டியலில் ஐபோன் விழுந்த நிலையில் அதை தர மறுப்பது நியாயமற்றது, கோயில் உண்டியலில் வெடிகுண்டு விழுந்தால் என்ன செய்வார்கள்? என கலகலப்பாக கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில்; கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகளை தமிழகத்தில் கொட்டுவது கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு முறையும் அதை போராடி நாங்கள் தடுத்து வருகிறோம். புகார் அளித்தாலும் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கேராளவில் தமிழக கழிவுகளை எடுத்து சென்று கொட்டினால் அந்த மாநிலத்தின் மக்கள் அதை எதிர்ப்பார்கள். தமிழகத்தின் வளங்களை கொள்ளையடித்து சென்று விட்டு கழிவுகளை இங்கு வந்து கொட்டுகிறார்கள். இந்த பிரச்சனை இந்த ஆட்சியில் மட்டுமல்ல சென்ற ஆட்சியிலிருந்தே நடக்கிறது. இது குறித்து யாரும் கண்டுக்கொள்வதில்லை. நீ கடவுளின் தேசம் என்றால் நாங்க கண்றாவி தேசமா? எனக் கேள்வி எழுப்பினார்.
தி.மு.க ஆட்சியின் சாதனைகள் என்ன என்பதை எப்படி பரணி பாடப்போகிறார்கள் என்பதை கேட்போம். வெள்ள பாதிப்புக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. நீதிமன்ற வாயிலில் கொலை, மருத்துவமனைக்குள் கொலை, பள்ளிக்குள் கொலை என பல இடங்களில் கொலை சம்பவங்கள் அன்றாடம் நடக்கிறது.
ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மக்களை வீதியில் போராட வைத்துவிட்டு சிறந்த ஆட்சி தருகிறோம் என்கிறார்கள். போராட்டங்களை எதிர்கொள்ள துணி இல்லாத ஆட்சியாளர்களாக இந்த ஆட்சியாளர்கள் உள்ளார்கள்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்த்து எங்களுக்கு என்ன பயம். அவர் என்ன ஆரியப்படைத் தலைவரா? பணம் கொடுத்தால்தான் தி.மு.க.,வினர் வேலை செய்வார்கள். எங்கள் பின்னாடி இருப்பவர்கள் பொதுமக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பவர்கள், அவர்களுக்கு ஆதரவாக நிற்பவர்கள் தான் எங்களோடு எந்த எதிர்பார்ப்பும் இன்றி இருக்கிறார்கள்.
ஆயிரம் இருந்தாலும் நடிகர் விஜய் எனது தம்பி! அவர் எனது எதிரி அல்ல! தி.மு.க.,தான் எனது எதிரி. பாஷா இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ள சென்ற போது ஓட்டு பிச்சைக்காக நான் செல்வதாக விமர்சிக்கிறார்கள். இஸ்லாமியர்கள் எனக்கு இதுவரை வாக்களித்தது இல்லை. இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் 6ஆவது கடமையாக தி.மு.க.,வுக்கு வாக்களிப்பதை வைத்துள்ளார்கள். இறைதூதரே வந்து சீமானுக்கு ஓட்டு போடுங்கள், தி.மு.க.,வுக்கு போடாதீங்கன்னு சொன்னா கூட, இந்த மக்கள் "நீங்கள் இறைதூதரே இல்லை"னுதான் சொல்வாங்க!. ஏன்னா நான் பா.ஜ.க.,வோட பி டீமாம்! சரி அப்போ ஏ டீம் யாரு, தி.மு.க.,தானே!
பா.ஜ.க.,விற்கும் சமூக நீதிக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது? பா.ஜ.க.,விற்கு சமூக நீதி மட்டுமல்ல ஜமுக்காள நீதி கூட கிடையாது. சாதிவாரி கணக்கெடுப்பை பா.ஜ.க நடத்துமா? சமூகநீதி பேசுபவர்கள் பொருளாதார அடிப்படையில் எப்படி இடஒதுக்கீடு கொண்டு வந்தார்கள். குஜராத் கலவரத்தில் ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்தது யார்? இன்றைக்கு ஏழையாக இருக்கிற சீமான் நாளை அதானி, அம்பானி ஆகலாம். இவ்வளவு உயரம் தொட்ட இளையராஜா மீதே சாதி சேற்று பூசுகின்றனனர் என சீமான் பேசினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது ஜல்லிக்கட்டு ராஜேஷ் உள்பட நாம் தமிழர் கட்சி முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.