/indian-express-tamil/media/media_files/pe9lyr2ZsRxNxqIUTtxA.jpg)
கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறச் சென்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் மீது தாக்குதல்
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறப்போனபோது, நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 150க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 50க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் தற்போது கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து அரசியல் கட்சி தலைவர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். அந்த வகையில் அமைச்சர்கள் உதயநிதி, மா.சுப்பிரமணியன், எ.வ வேலு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, வி.சி.க தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க எம்.பி வைகோ, பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழக வெற்றி கழக தலைவரும், நடிகருமான விஜய் உள்பட பலரும் சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (ஜூன் 21) நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரான சாட்டை துரைமுருகன், கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களை சந்தித்து ஆறுதல் கூற காரில் சென்றார். துரைமுருகன் காரில் இருந்து இறங்கியதும், அங்கிருந்த சிலர் சாட்டை துரைமுருகனுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் சாட்டை துரைமுருகனிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும் ஒருவர் திடீரென்று சாட்டை துரைமுருகனை தாக்க முயன்றார். உடனடியாக சாட்டை துரைமுருகன் சுதாரித்து கொண்டு விலகினார். ஆனாலும் அந்த நபர் விடவில்லை. தொடர்ந்து சாட்டை துரைமுருகனை தாக்க முயன்றார். இதனால் பதிலுக்கு சாட்டை துரைமுருகனும் அவரை தாக்க முயன்றார். இதனால் கைக்கலப்பு உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சாட்டை துரைமுருகனிடம் பேசி காரில் அனுப்பி வைத்தனர்.
கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக சாட்டை துரைமுருகன் தனது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சாட்டை துரைமுருகன் ஆளும் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இந்த வீடியோ காரணமாக தான் அவர் மீது தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.