ராசிபுரத்தைச் சேர்ந்த செவிலியர் ஒருவர், தான் 30 வருடங்களாக இடைத்தரகராக செயல்பட்டு குழந்தைகளை விற்று வந்ததாக பேசிய ஆடியோ வெளியாக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த செவிலியர் அமுதா விருப்ப ஓய்வு பெற்று, 30 வருடங்களாக இடைத்தரகராகச் செயல்பட்டு, குழந்தைகளை வாங்கியும் விற்று வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு, குழந்தைகள் இருப்பதை அவர்கள்மூலம் அறிந்து, குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு விற்றுவந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இவர், சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த குழந்தை இல்லாத ஒருவரிடம் பேசுவதாக ஒரு ஆடியோ வைரலாகி வருகிறது. அதில், 'குழந்தைகளின் கலர், எடை ஆகியவைதான் அதன் விலையை நிர்ணயிக்கின்றன. ஆண் குழந்தை என்றால் குறைந்தபட்சம் ரூ.4 லட்சம் வரையிலும், பெண் குழந்தை என்றால் ரூ.3 லட்சம் வரையிலும் விற்கப்படும். அதுமட்டுமின்றி, ரூ. 70 ஆயிரம் கொடுத்தால், ராசிபுரம் நகராட்சியில் குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழும் வாங்கித் தரப்படும்' என்று பேசுவதாக உள்ளது. இந்த ஆடியோ வெளியாகியுள்ள நிலையில், ஓய்வுபெற்ற நர்ஸ் அமுதாவிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
விசாரணை இறுதியில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் எச்சரித்துள்ளார்.