/tamil-ie/media/media_files/uploads/2018/09/2-48.jpg)
சேலம் விபத்து
சேலத்தில் விபத்தில் சிக்கிய நபர், கணவர் என்று தெரியாமல் அவரது உயிரை காப்பாற்ற முயன்ற மனைவியின் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓமலூர் அருகேயுள்ள மேச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி சிவகாமி, ஓமலூர் அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறார். நேற்றைய (23.9.18) தினம், சீனிவாசன் தனது இருசக்கர வாகனத்தில் வெளியில் சென்றிருந்தார்.
அப்போது அவரது வாகனம் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. இதனால் சீனிவாசனுக்கு தலை மற்றும் உடலில் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து, அங்கிருந்தவர்கள் சீனிவாசனை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, தலையில் பலத்த காயமடைந்த சீனிவாசன் முகம் முழுவதும் ரத்தம் வழிந்துக் கொண்டிருந்தது.
இதையடுத்து மருத்துவமனைக்கு வந்தவர் யாரென்று தெரியாமல் அவரது மனைவி சிவகாமி அவருக்கு முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்ற முயற்சி செய்தார். ஆனால் அதற்குள் சீனிவாசன் இறந்து விட்டார். அதன் பின்பு தான் இறந்தவர் தனது கணவர் என்பது சிவகாமிக்கு தெரிய வந்துள்ளது.
கணவரின் சடலத்தை பார்த்து சிவகாமி கதறி அழுத சம்பவம் பார்ப்பவர்களையும் கணகலங்க வைத்தது. சிவகாமி மருத்துவமனையில் தன் கணவரைக் கட்டியணைத்து அழுதார். அவரை யாராலும் தேற்ற முடியவில்லை. இந்த உருக்கமான சம்பவம் அங்கிருந்தவர்களுக்கு சோகத்தை வரவழைத்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.