/indian-express-tamil/media/media_files/2024/11/12/wXf0lTz8a1PtP0uOZKKu.jpg)
சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெற்றது.
இந்த உண்ணாவிரத போராட்டத்தின் முக்கிய கோரிக்கையாக தேர்தல் வாக்குறுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தவாறு சத்துணவு ஊழியர்களை முழு நேர அரசு ஊழியர் ஆக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
சத்துணவு ஊழியர்கள் ஓய்வு பெறுகின்ற நாளில் ஒட்டுமொத்த தொகையாக ரூபாய் 5 லட்சம் வழங்க வேண்டும் என்றும் 63 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையிலும், மாணவர்கள் நலன் கருதியும் நிரப்பிட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
சத்துணவு ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூபாய் ஒன்பதாயிரம் வழங்க வேண்டும் என்றும் காலை சிற்றுண்டி திட்டத்தை அனைத்து பள்ளிகளிலும் விரிவுபடுத்தி, சத்துணவு ஊழியர்களை கொண்டு அமல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உணவு மானியத்தை ஒரு மாணவருக்கு ரூபாய் ஐந்தாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாநிலம் தழுவிய மாபெரும் உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெற்றது.
இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் அமுதா தலைமை தாங்கிய நிலையில் மாவட்ட துணைத்தலைவர்கள் சாந்தி, ஷேக் முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் பெரியசாமி கலந்துகொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மேலும் போராட்டத்தின் கோரிக்கைகளை மாவட்ட செயலாளர் அல்போன்சா எடுத்துரைத்து பேசினார்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
செய்தி: சன்முக வடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.