கொறடா உத்தரவை மீறி அரசுக்கு எதிரான நம்பிக்கை கோரும் தீர்மானத்தில், அரசுக்கு எதிராக வாக்களித்த ஒ.பி.எஸ் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்க கோரிய வழக்கில் சட்டப்பேரவை செயலாளர் எழுத்து பூர்வமான இறுதி வாதம் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தலைமை நீதிபதி அமர்வு தள்ளிவைத்தது.
2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், அரசுக்கு எதிராக வாக்களித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஓ.பன்னீர்செல்வம், செம்மலை, க.பாண்டியராஜன் உட்பட ஒ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏ. க்கள் 11 பேருக்கு எதிராக கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு உத்தரவிடவும், அவர்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர்க்கு உத்தரவிட்ட கோரி திமுக கொறடா சக்கரபாணி, தினகரன் ஆதரவு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. க்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட நான்கு பேர் சார்பில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஷ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் நிலுவையில் உள்ளது. இவ்வழக்கு கடந்த மாதம் 27 ஆம் தேதி இறுதி விசாரணைக்கு வந்த போது, திமுக, வெற்றிவேல், சட்டப்பேரவை செயலாளர், ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் தரப்பில் இறுதி வாதங்களை நிறைவு செய்தனர்.
இதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது.
பின்னர் நீதிபதிகள் எழுத்துபூர்வ வாதங்களை மார்ச் 5 ஆம் தேதி தாக்கல் செய்ய அனைத்து தரப்புக்கும் உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு கடந்த திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டப்பேரவை செயலாளர் தவிர மற்ற தரப்பினர் அனைவரும் எழுத்து பூர்வமான இறுதி வாதங்களை தாக்கல் செய்தனர். சட்டப்பேரவை செயலாளர் சார்பில் எழுத்து பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் அளிக்க கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து 7 ஆம் தேதி வரை கூடுதல் கால அவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனையடுத்து இந்த வழக்கில் இன்று தமிழக சட்டப்பேரவை செயலாளர் சார்பில் இறுதி எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்யபட்டாது. இதனையடுத்து வழக்கின் தீர்ப்பினை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:O paneer selvam supporting mlas disqulification case adjournment date of verdict