/tamil-ie/media/media_files/uploads/2018/07/s695.jpg)
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் அளித்த புகார் குறித்து, சிபிஐ விசாரணைக்கு ஏன் உத்தரவிடக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுதொடர்பாக, திமுக அமைப்புச் செயலாளரும் ராஜ்ய சபா எம்.பி.யுமான ஆர். எஸ். பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தனது மனைவி விஜயலட்சுமி, மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப், மகள் கவிதா பானு மற்றும் சகோதரர்கள் பெயரில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார்.
வருமானம் குறித்து தவறான தகவல்களை தேர்தல் வேட்பு மனுக்களில் கொடுத்துள்ளார். தேனி மாவட்டம் போஜராஜன் மில்ஸ் நிறுவனத்துக்கு 99 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட 140 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை சந்தை விலைக்கும் குறைவாக கொடுத்து வாங்கியுள்ளார்.
ஸ்ரீவில்லிப்புத்தூரில் செண்பகத்தோப்பு பகுதியில் மாந்தோப்பு வாங்கியுள்ளார். அமெரிக்கா, துருக்கி, இந்தோனேசியா நாடுகளில் உள்ள நிறுவனங்களிலும், இந்திய நிறுவனங்களிலும் பன்னீர்செல்வத்தின் வாரிசுகள் முதலீடு செய்துள்ளனர்.
2011 தேர்தலில் மனைவிக்கு 24.20 லட்ச ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்ட பன்னீர்செல்வம், 2016 ஆம் ஆண்டு 78 லட்ச ரூபாய்க்கு சொத்துள்ளதாக தெரிவித்துள்ளது சந்தேகத்தை எழுப்புகிறது.
இவரது மகன் ஜெயபிரதீப் மூன்று நிறுவனங்களில் இயக்குனராக உள்ளார். பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சொத்துக்களை வாங்கியுள்ளார் என ஆர். எஸ். பாரதி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசு ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டி டைரியில் பன்னீர் செல்வத்துக்கு தொடர்பிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 6 மாதங்களில் அவரிடம் 4 கோடி ரூபாய் பணம் பெற்றுள்ளதாக டைரியில் குறிப்பிட்டுள்ளார். உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த பிறகு சிபிஐ சேகர் ரெட்டியின் விட்டில் சிபிஐ நடத்திய சோதனையில் இந்த டைரி கைப்பற்றப்பட்டது.
இதன்மூலம் தனக்கு வாக்களித்த மக்களுக்கு அவர் துரோகம் இழைத்துள்ளார்.
இதுதொடர்பாக, மார்ச் 10ம் தேதி லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கையில்லை. பொது ஊழியருக்கு எதிராக புகார் அளித்தால் உடனடியாக விசாரணை நடத்த வேண்டிய கடமை உள்ளதால், ஒ.பன்னீர்செல்வம் குடும்பத்தினர் மீதான சொத்துக் குவிப்பு தொடர்பாக கொடுத்த புகாரின் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில், தமிழக அரசு சார்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர், இமாலியாஸ், கூடுதல் அட்வகேட் ஜெனரல் மணிசங்கர் மற்றும் மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என். ஆர். இளங்கோ ஆஜராகி வாதிட்டனர்.
நீதிமன்றத்தில் நடந்த வழக்கறிஞர்கள் வாதத்தின் விவரம்,
அரசு வழக்கறிஞர்:- மார்ச் மாதம் மனுதாரர் கொடுத்த புகாரானது, தலைமை செயலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நீதிபதி:- சரி, அந்த புகார் மீது யார் விசாரணை நடத்துவது? புகார் கொடுத்து மூன்று மாதமாகிவிட்டதே. புகாரை அனுப்பினால் மட்டும் போதுமா? என கேள்வி எழுப்பினார்.
அரசு தரப்பு:- அதை பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.
நீதிபதி :- சேகர் ரெட்டி மீதான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. அவரிடம் இருந்து கைப்பற்றியதாக கூறப்படும் டைரியில் பன்னீர் செல்வம் பெயர் இருப்பதாக மனுதாரர் தரப்பு தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த புகார் மனு தொடர்பான வழக்கை ஏன் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கூடாது?
அரசு தரப்பு :- மாற்றக் கூடாது. இம்மனு குறித்து பதில் அளிக்க அவகாசம் வேண்டும்.
நீதிபதி :- இங்கு சிபிஐ தரப்பு வழக்கறிஞர் உள்ளாரா?
சிபிஐ தரப்பில் சீனிவாசன் ஆஜராகி, 'ஆமாம் இருக்கிறேன்' என்று தெரிவித்தார்.
நீதிபதி:- இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் இருக்கிறதா?
சிபிஐ வழக்கறிஞர்- எங்களுக்கு தெரியாது. ஏனெனில், இந்த வழக்கி சிபிஐ எதிர்மனுதாரர் கிடையாது. இது தொடர்பாக துறை அதிகாரிகளிடம் கேட்க வேண்டும் என தெரிவித்தார்.
நீதிபதி :- (மனுதாரர் வழக்கறிஞரை பார்த்து) முதலில் நீங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிராமண பாத்திரங்களை சிபிஐ தரப்புக்கு கொடுங்கள் என தெரிவித்தார்.
தமிழக அரசு தரப்பு:- கூடாது. இவ்வழக்கில் மனு குறித்து பதில் தர அவகாசம் வேண்டும். திங்கட் கிழமை இது தொடர்பான பதில் அளிப்பதாகவும் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்றார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, பதில் தர தமிழக அரசு தரப்புக்கு அவகாசம் கொடுத்து, விசாரணையை வரும் திங்கட்கிழமை தள்ளி வைத்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.