/indian-express-tamil/media/media_files/2025/07/31/o-panneerselvam-after-meeting-with-dmk-tn-cm-mk-stalin-tamil-news-2025-07-31-18-56-54.jpg)
அ.தி.மு.க ஆட்சி காலத்தில் 3 முறை ( 2001 - 2002, 2014 - 2015, 2016) தமிழக முதலமைச்சராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். 2016-ல் முன்னாள் முதல்வர் ஜெயலிதாவின் மறைவுக்குப் பிறகு, அவர் முதல்வர் பொறுப்பு வகித்த போது, கட்சிக்குள் நிலவிய நெருக்கடி காரணமாக பதவி விலகி தர்ம யுத்தம் நடத்தினார். அதன்பிறகு, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சராக பொறுப்பு வகித்தார்.
2021 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க தோல்வி கண்டது. இதன்பிறகு கட்சியில் எடப்பாடி பழனிசாமி ஒருணைப்பாளராகவும், ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருணைப்பாளராகவும் பதவி வகித்தனர். ஆனால், சில மாதங்களில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்கிற குரல் ஒலித்தது. அப்போது, அ.தி.மு.க இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் என அணிகளாக உடைந்தது. கட்சியை கைப்பற்றும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி பழனிசாமி வென்றார். அத்துடன் செயற்குழு மற்றும் பொதுக்குழுக்களின் ஆதரவுடன் பொதுச்செயலாளராக வாகை சூடினார்.
அதேநேரத்தில், கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் புதிய அமைப்பைத் தொடங்கினார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க சிறுபான்மை கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால், ஓ.பன்னீர்செல்வம் பா.ஜ.க-வின் ஆதரவாளராக ராமநாதபுரத்தில் போட்டியிட்டு தோல்வி கண்டார்.
தற்போது 2026 சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் சூழலில், பா.ஜ.க-வுடன் மீண்டும் கூட்டணியை உறுதி செய்து, மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. இதனிடையே, இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்த பிரதமர் மோடியை அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அப்போது மோடியை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டதாகவும், ஆனால், அவருக்கு மட்டும் நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, கல்வி நிதியை விடுவிக்காத மத்திய அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்தார். இதனிடையே
ஓ.பன்னீர்செல்வம் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கப்போவதாக செய்திகள் பரவியது. இத்தகைய சூழலில், இன்று வியாழக்கிழமை காலையில் தமிழக முதலமைச்சரும், திராவிட முன்னேற்ற கழக தலைவருமான மு.க. ஸ்டாலினை அடையாறு பூங்காவில் நடைபயிற்சி செய்தபோது, ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார்.
இதன்பின்னர் இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவிப்பை வெளியிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், 'தி.மு.க.வை வீழ்த்துவது எங்கள் இலக்கல்ல' என்று கூறியிருந்தார். இந்த நிலையில் ஒரே நாளில் 2-வது முறையாக தற்போது முதலமைச்சரை ஓ. பன்னீர்செல்வம் சந்தித்துள்ளார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.
முதல்மைச்சருடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஓ. பன்னீர்செல்வம் பேசுகையில், "முதலமைச்சரின் உடல்நலம் பற்றி விசாரிக்க, மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து மறைவுக்கு இரங்கல் தெரிவித்தேன். அரசியல் ரீதியாக எந்தப் பேச்சும் நடக்கவில்லை" என்று தெரிவித்தார்.
தி.மு.க உடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு, "அரசியலில் நண்பர்களும் இல்லை, எதிரிகளும் இல்லை என்ற நிலை தான் கடந்த கால வரலாறு. எதிர்காலத்தில் தேர்தல் நெருங்குகின்ற நேரத்தில் எதுவும் நடக்கலாம். தமிழகத்திற்கு கல்வி நிதி தராததால் மத்திய பா.ஜ.க. அரசு மீது எனக்கு வருத்தம் உள்ளது. அரசியலில் எனக்கென்று ஒரு சுயமரியாதை இருக்கிறது. தேர்தலில் ஒன்று சேர்ந்துள்ள பா.ஜ.க. - அ.தி.மு.க.வுக்கு வாழ்த்துக்கள்." என்று கூறினார்.
விஜய்யுடன் கூட்டணி வைக்கப்படுமா? என்ற கேள்விக்கு, "இதுவரை அவர்களும் பேசவில்லை. நாங்களும் பேசவில்லை" என்று ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.