குஜராத்தில் நாளை நடைபெறும் பூபேந்திர படேல் முதலமைச்சர் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் ஞாயிற்றுக்கிழமை மாலை விமானம் மூலம் அகமதாபாத் புறப்பட்டு சென்றார்.
குஜராத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 182 இடங்களில் 156 இடங்களில் பா.ஜ.க ஸ்வீப் செய்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பா.ஜ.க குஜராத்தில் 7வது முறையாக வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க குஜராத்தில் 1995-ம் ஆண்டு முதல் 27 ஆண்டுகளாக ஆட்சியைத் தக்கவைத்து வருகிறது.
குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, தற்போதைய முதல்வர் பூபேந்திர படேலை முதல்வர் வேட்பாளராக பா.ஜ.க தலைமை அறிவித்தது. குஜராத்தில் பா.ஜ.க பெரும்பான்மை வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளதால், பூபேந்திர படேல் முதலமைச்சர் பதவியேற்பு விழா நாளை (டிசம்பர் 12) நடைபெறுகிறது. இந்த பதவியேற்பு விழாவில், ஓ. பன்னீர் செல்வம் பங்கேற்க உள்ளார். இதற்காக ஓ.பி.எஸ் இன்று மாலை 5.30 மணிக்கு விமானம் மூலம் அகமதாபாத் புறப்பட்டு சென்றார்.
அ.தி.மு.க-வில் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இடையே மோதல் நிலவி வருகிறது. பொதுக்குழு தொடர்பான மேல் முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. அ.தி.மு.க-வில் தங்கள் செல்வாக்கை உறுதி செய்ய பா.ஜ.க தலைமையின் ஆதரவைப் பெறுவதில் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இடையே கடும் போடிகளும் காய்நகர்த்தல்களும் நடந்து வருகிறது.
அண்மையில், ஜி20 மாநாட்டின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க இடைக்காலப் பொது செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத ஜோஷி கடிதம் அனுப்பினார். இதற்கு ஓ.பி.எஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறையில் கடிதம் அளிக்கப்பட்டது. இ.பி.எஸ்-க்கு கடிதம் அனுப்பியதால் பா.ஜ.க அவரை அங்கீகரித்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.
இந்த நிலையில்தான், குஜராத்தில் நாளை (டிசம்பர் 12) நடைபெற உள்ள பூபேந்திர படேல் முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் தமிழக முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று மாலை 5.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் அகமதாபாத் புறப்பட்டு சென்றார். இதன் மூலம், பா.ஜ.க-வின் எல்லா நிகழ்வுகளிலும் ஓ.பி.எஸ் இருப்பார் என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே, குஜராத்தில் பூபேதிர படேல் முதல்வர் பதவியேற்பு விழாவில் இ.பி.எஸ் பங்கேற்கவில்லை என்று தெரியவந்துள்ளது. இ.பி.எஸ் விழாவில் பங்கேற்க முடியாத சூழலில் உள்ளதாகவும், முதல்வராக பதவியேற்கும் பூபேந்திர படலுக்கு வாழ்த்து கூறி இ.பி.எஸ் கடிதம் அனுப்பியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"