/indian-express-tamil/media/media_files/2025/09/05/o-panneerselvam-support-ka-sengottaiyan-aiadmk-tamil-news-2025-09-05-11-57-27.jpg)
"அ.தி.மு.க-வின் சக்திகள் பிரிந்திருந்தால் நாம் வெற்றி பெற முடியாது எனும் சூழல் கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளாக உள்ளது." என்று ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ செங்கோட்டையனுக்கும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பனிப்போர் நிலவி வருவதாக கூறப்படுகிறது. இதனால், கட்சியின் முக்கிய முடிவுகளில் அவருக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி அவரை படிப்படியாக ஓரங்கட்டுவதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து, செங்கோட்டையன் தான் மனம் திறந்து பேச உள்ளதாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
மேலும், தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக, செங்கோட்டையன் இன்று (செப்டம்பர் 5) காலை 9 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக அறிவித்தார். அதன்படி, கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பரபரப்பு கருத்துகளை வெளியிட்டார். அதில், “ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எனக்கு 2 வாய்ப்புகள் கிடைத்தன. அ.தி.மு.க உடைந்துவிடக் கூடாது என்பதற்காக பல்வேறு தியாகங்களை செய்துள்ளேன். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக பரிந்துரைத்தவர் சசிகலா.
ஆட்சி மாற்றத்திற்கு அ.தி.மு.க-வில் இருந்து வெளியே சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும். தொண்டர்களின் உணர்வுகளை புரிந்தே இந்த கோரிக்கையை வலியுறுத்தி உள்ளோம். அ.தி.மு.க-வில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் 10 நாட்களில் ஒருங்கிணைக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், ஒருங்கிணைப்பு பணிகளை நாங்களே மேற்கொள்வோம். வெளியே சென்றவர்களை அரவணைத்தால்தான் நம்மால் வெல்ல முடியும் என்பது எம்.ஜி.ஆர் சொல்லிக்கொடுத்த பாடம்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், செங்கோட்டையனின் பேச்சுக்கு முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தேனியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், "செங்கோட்டையன் எனது மனதின் குரலை வெளிப்படுத்தி இருக்கிறார், அவருக்கு நாங்கள் நிச்சயம் உறுதுணையாக இருப்போம். அ.தி.மு.க-வை ஒருங்கிணைக்க யார் முயற்சி செய்தாலும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பேன். அ.தி.மு.க-வின் சக்திகள் பிரிந்திருந்தால் நாம் வெற்றி பெற முடியாது எனும் சூழல் கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளாக உள்ளது. செங்கோட்டையனின் எண்ணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்" என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.