நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பின்னர், கோடநாடு சம்பவ வழக்கு விசாரணை மீண்டும் தீவிரமடைந்து வருகிறது.
இந்த நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பினர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம், 'கொடநாடு வழக்கில் குற்றவாளி யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தினார்.
இதன்பிறகு பேசிய வைத்திலிங்கம், 'முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. கொடநாடு வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என தி.மு.க. வாக்குறுதி கொடுத்தது. தி.மு.க ஆட்சிக்கு வந்து இரண்டரை வருடம் ஆகியும் கொடநாடு வழக்கில் எந்த நடவடிக்கையும் இல்லை. வழக்கை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு குற்றவாளி யார்?. கொடநாடு வழக்கு கிடப்பில் போடப்பட்டதாகவே கருதுகிறோம்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தியும், மாநில அளவில் ஆகஸ்ட் 1-ம் தேதி ஆர்பாட்டம் நடைபெறும்.
கொடநாடு சம்பவம் நிகழ்ந்து 6 ஆண்டுகள் கடந்தும் விசாரணை கிடப்பில் உள்ளது. விரிவான விசாரணை நடத்தினால்தான் குற்றவாளிகள் யார் என்பது தெரியவரும். கோடநாடு வழக்கில் விரைந்து விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
அ.தி.மு.க பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil