அ.தி.மு.க-வின் முன்னாள் பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் நினைவு நாள் டிசம்பர் 5-ம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதயொட்டி, கட்சி நிர்வாகிகள் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன் ஆகியோருடன் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து பேரணியாக வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி எடுத்தார்.
இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “இதற்கு முன்பு இரட்டை இலை தொடர்பான பல வழக்குகளில் தற்காலிகமாகதான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சிவில் நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்பு இறுதியாக இருக்கும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இரட்டை இலை சின்னம் யாருக்கு வழங்க வேண்டும் என்ற வழக்கில், அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் பெற வேண்டும் என நாங்கள் வைத்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இறுதியாக இரட்டை இலை சின்னம் தொண்டர்களின் கைகளுக்கு வந்து சேரும்.
அ.தி.மு.க-வுக்கு வந்த சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றியவர் ஜெயலலிதா. மக்களவையில் 3-வது பெரிய கட்சியாக அ.தி.மு.க-வை உயர்த்தியவர் அவர். அவரின் தியாகத்துக்கு உச்சபட்ச பதவி வழங்கப்பட்டது. அ.தி.மு.க-வின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்துள்ளனர்.
இதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. அதனால்தான் அவர்கள்(இ.பி.எஸ் அணி) சந்தித்த தேர்தலில் எல்லாம் தோல்வியைச் சந்தித்துள்ளனர். இதற்கு கடந்த தேர்தலில் அவர்கள் கண்ட தோல்வியே சாட்சி. அ.தி.மு.க-வில் பிரிந்துள்ள அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்தால்தான், தேர்தலை சந்தித்து வெற்றி பெற முடியும் என்று தொண்டர்கள், மக்களும் எண்ணுகிறார்கள். அதேதான் நாங்கள் சொல்லி வருகிறோம்” என்று ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“