2021 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் தொடர்பாக தமிழகத்தின் துணை முதல்வர் ஒ. பன்னீர்செல்வம் தனது கருத்தை ட்விட்டரில் பதிவு செய்தார்.
அவர் விடுத்துள்ள செய்தியில்," தொடர்ந்து 3-வது முறையாக 2021-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே அ.இ.அ.தி.மு.கவின் இலக்கு. அதுவே மாண்புமிகு அம்மா அவர்களின் கனவு. அதனை நனவாக்க கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் அனைவரும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்பது எனது அன்பு வேண்டுகோள்! " என்று தெரிவித்தார்.
மற்றொரு ட்வீட்டில், " தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே!" என்றும் தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதியன்று ஆயிரம் விளக்குத் தொகுதியின் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வம் டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்துப் பேசியதில் இருந்து தமிழகத்தில் அரசியல் கலம் சூடு பிடிக்க ஆரம்பித்தது.
2021 ஆண்டு தேர்தல் களம் என்பது திமுக vs பாஜக என மாறியுள்ளது. நாங்கள் வெகு வேகமாக தமிழகத்தில் வளர்ந்து வருகிறோம். 2021 ஆம் ஆண்டு நடக்கவுள்ள தேர்தலில் எங்கள் தலைமையிலான கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்” என்று வி.பி. துரைசாமி தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த மீன்வளத்துறை அமைச்சர் விஜயகுமார், "அதிமுக என்ற ஆலமரம் நாளுக்குநாள் வளர்ந்துகொண்டே தான் இருக்கிறது; இந்த மரம் அழியாது" என்றும், பாஜக தலைமையில்தான் கூட்டணி என்று அதன் தலைவர் முருகன் கூறவில்லை" என்றும் பதிலளித்தார்.
இதற்கிடையே, 2021ம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலைச் சந்திக்க வேண்டும் என, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும், வருவாய்த் துறை அமைச்சர் உதயக் குமாரும் வெளிப்படையாக கருத்து தெரிவித்த்திருந்தனர்.
இந்த சூழலில் தான், பன்னீர்செல்வம் அவர்களின் ட்விட்டரில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil