மாலை 4.20: தூத்தூர் தனியார் கல்லூரியில் 8 மீனவ கிராம மக்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
பிற்பகல் 15.31 - கல்படி பகுதியில் ஒகி புயலால் பாதித்த பகுதிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்து வருகிறார். ஆய்வில் அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்
11.22: கன்னியாகுமரி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.
கன்னியாகுமரி புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று (செவ்வாய் கிழமை) கன்னியாகுமரி செல்கிறார்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கன்னியாகுமரி அருகே ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறியது. ‘ஓகி’ என பெயரிடப்பட்ட இந்த புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன.
அதுமட்டுமல்லாமல், புயலுக்கு முன்பு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் புயலில் மாயமாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மீனவர்களை மீட்க தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கன்னியாகுமரி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது வரை அம்மாவட்டத்திற்கு செல்லவில்லை. மேலும், ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் ஈடுபட்டார்.
இதனால், புயலால் பாதிப்படைந்திருக்கும் மக்களை கண்டுகொள்ளாமல் முதலமைச்சர் தேர்தலுக்கு பிரச்சாரம் செய்வதாக, திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
இந்நிலையில், இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்று, புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார். காலை 10.15 மணிக்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி செல்லும் அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களையும் அவர் சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.