முட்டையின் மஞ்சள் கரு, தாவர எண்ணெய், வினிகர் மற்றும் சில மசாலா பொருட்கள் கலந்து செய்யப்படும் ஒரு உணவு பொருளாக மையோனைஸ் உள்ளது. இதை தயாரிக்க பச்சை முட்டையை பயன்படுத்துவதால் கிருமி தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தடை விதிப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
முறையற்ற வகையில் மையோனைஸ் தயார் செய்வது மற்றும் முறையாக சேமித்து வைக்கப்படாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் மையோனைஸ் பொது சுகாதாரத்திற்கு அதிக பாதிப்பை விளைவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006-ன் பிரிவு 30 (2) (a) படி முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் வகைகளுக்கு ஓராண்டு காலம் தடை விதிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின்படி பொதுமக்கள் நலன் கருதி தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும், மையோனைஸ் உற்பத்தி செய்வது, சேமித்து வைப்பது, விநியோகம் செய்வது, விற்பனை செய்வது உள்ளிட்டவைகளுக்கு தடை விதிப்பதாக இந்த அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்ட தமிழ்நாடு அரசிதழில், ஏப்ரல் 8ம் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்கு இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தெலுங்கானா மாநிலத்தில் மையோனைஸ் தயாரிக்கப்படுவதற்கு ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் அந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.