தமிழ்நாட்டின் ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சிக்கு அனுமதி வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. கன்னியாகுமரி அருகே தென்முனையிலும், சென்னைக்கு அருகிலும் ஆழ்கடலில் எண்ணெய் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய எரிசக்தி இயக்குனரகம் (DGH) சார்பாக எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கான திறந்த வெளி அனுமதி (OALP) அடிப்படையில், கடந்த ஜனவரி 2024-ல் 9ஆவது சுற்று ஏலம் விடப்பட்டது. இதில் தமிழக ஆழ்கடல் பகுதியில் 4 வட்டாரங்கள் உட்பட நாடு முழுவதும் 28 வட்டாரங்களில் 1,36,596 சதுர கிலோமீட்டர் ஏலம் விடப்பட்டது. இதில் தமிழகத்தின் தென் முனையில் குமரிக்கு அருகே உள்ள ஆழ்கடலில் 3 மற்றும் சென்னைக்கு அருகே ஆழ்கடல் பகுதியில் 1 ஆகியவை அமைந்துள்ளன.
கன்னியாகுமரி தென்முனையில் உள்ள ஆழ்கடலில் 3 வட்டாரங்கள் முறையே...
1. CY - UDWHP-2022/1 - 9,514.63 ச.கி
2. CY - UDWHP-2022/2 - 9,844.72 ச.கி
3. CY - UDWHP-2022/3 - 7,795.45 ச.கி
சென்னைக்கு அருகே ஆழ்கடலில் 1 வட்டாரங்கள் முறையே...
1. CY - UDWHP-2023/1 - 5,330.49 ச.கி
என மொத்தமாக 32485.29 சதுர கிலோமீட்டர் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு, ஒற்றை அனுமதி முறையில் ஏலம் விடப்பட்டன. கடந்த 03.01.2024 அன்று மேற்கண்ட இடங்களில் ஆய்வு மற்றும் உற்பத்தி கிணறு அமைக்க சர்வதேச அழைப்பானை விடுக்கப்பட்டது. முதலில் 29.02.2024 இறுதி நாளாக அறிவிக்கப்பட்டு பின்னர் காலகெடு நீடிக்கப்பட்டு கடந்த செப்டம்பர் 21, 2024 அன்று விண்ணப்பிக்கும் காலம் முடிவடைந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் மேற்கண்ட பகுதிகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனங்கள் இடையே போட்டி உள்ளதாக மத்திய எரிசக்தி இயக்குனரகம் அறிவித்திருந்தது.
எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணிகளால் கடல் வளம் கடுமையாக பாதிக்கும் என்று மீனவ மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த சூழலில், கடந்த வாரம் டெல்லியில் ஏலம் இறுதி செய்யப்பட்டு தமிழ்நாட்டில் 4 வட்டாரங்கள் உட்பட இந்தியாவில் 28 வட்டாரங்களில் எண்ணெய் எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக ஆர்கஸ் மீடியா செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.