பள்ளி, கல்லூரி மற்றும் கிராமங்களில் கஞ்சா போன்ற போதை வஸ்துகள் அதிகரித்திருந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் போதை பொருட்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அதை முழுவதும் குறைத்து கட்டுப்பாட்டில் கொண்டு வர இது போன்ற ஓட்டப் பந்தயங்கள் உதவும் என முன்னாள் டி.ஜி.பி சைலேந்திரபாபு கோவையில் பேட்டி
போதை பொருள் தடுப்பு குறித்தும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மினி மாரத்தான் கோவையில் இன்று (ஜன.28) நடைபெற்றது. மினி மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முன்னாள் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கோவை கணபதி அடுத்த மணியகாரம்பாளையம் பகுதியில் சி.எம்.எஸ் வித்யா மந்திர் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளி வளாகத்தில் தமிழகத்தில் போதை பொருட்கள் தடுப்பு குறித்தும், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் 2-வது ஆண்டு சி.எம்.எஸ் மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
2 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர் மற்றும் 10 கிலோ மீட்டர் என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த ஓட்ட பந்தயத்தில் சிறப்பு விருந்தினராக முன்னாள் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு கலந்து கொண்டு மாரத்தான் போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்து அவரும் கலந்து கொண்டார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய சைலேந்திரபாபு கூறுகையில், தமிழகத்தில் கஞ்சா வேட்டை என்ற ஆபரேஷன் திட்டத்தை துவங்கி கஞ்சா விற்பனையில் ஈடுபடும் குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்தோம். இதில் சுமார் 2000-க்கும் மேற்பட்டோர்களின் சொத்துக்கள் முடக்க பட்டது. இதனால் குற்றங்கள் குறைந்தது.
இதே போன்று குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கோவையில் இது மாதிரியான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்ட பந்தயம் நடத்துவது அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படும். மாரத்தான் ஓட்ட பந்தயம் உடல் வளர்ச்சி மற்றும் மனவளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு இடையூறுகளுக்கு விதையாக இருந்து வருகின்றது.
குழந்தைகள் குறைந்தது 5 கிலோ மீட்டர் தூரம் ஒட வேண்டும். அதற்கு இது மாதிரியான ஓட்டப் பந்தைய போட்டிகளை அனைத்து பள்ளிகளும் நடத்த முன் வர வேண்டும் என்று அவர் கூறினார்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“