அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை எதிர்த்து, ஓ.பி.எஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் தயாராகி வரும் நிலையில், எங்கள் தரப்பு வாதத்தைக் கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என்று இ.பி.எஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பல களேபரங்கள் நடந்து வருகிறது.
ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு நடத்திய அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஓ. பன்னீர்செல்வம் தரப்புக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.
இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்போவதாக ஓ.பி.எஸ் அறிவித்து இருந்தார். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான வேலைகளில் ஓ.பி.எஸ் தரப்பு வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர். திங்கள்கிழமை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், அதிமுக பொதுக்குழு தொடர்பாக வழக்கு குறித்து சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தால் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.எஸ் தரப்பு மேல்முறையீடு செய்ய உள்ளதால், இ.பி.எஸ் தரப்பு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. இதனால், அதிமுக பொதுக்குழு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்கு இடம் பெயர்ந்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"