scorecardresearch

கோர்ட் படியேறிய ஓ.பி.எஸ்; பொதுக் குழுவுக்கு தடையா? லேட்டஸ்ட் நகர்வுகள்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் பொதுக்குழு கூட்டத்தைத் தள்ளி வைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு எழுதிய கடிதத்தை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது ஓ.பி.எஸ்-சின் அடுத்த கட்ட நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

O Panneerselavam, AIADMK, edappadi K Palaniswami, O panneerselvam, admk, general body meeting, அதிமுக பொதுக்குழுவை தள்ளிவைக்ககோரி ஓ.பி.எஸ் எழுதிய கடிதம், உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல், அ.தி.மு.க, பொதுக்குழு கூட்டம், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், AIADMK General council meeting, Chennai court

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டத்தை தள்ளிவைக்க வேண்டுமென ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதிய கடிதத்தை சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 14 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் பலரும் அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று வலியுறுத்தியதில் இருந்தே அதிமுகவில் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இடையே மோதல் வெடித்து வருகிறது.

ஓ.பி.எஸ் ஒற்றைத் தலைமை தேவையில்லை என்று கூறிவரும் நிலையில், இ.பி.எஸ் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் ஒற்றைத் தலைமையே தீர்வு பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமைக்கான தீர்மான கொண்டுவரப்படும் என்று கூறி வருகின்றனர். அதே நேரத்தில், ஜூன் 23 ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கான ஏற்பாடு, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே, ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இருவரும் தனித்தனியே தங்களுடைய ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனால், அதிமுகவில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக அடுத்தடுத்த காட்சிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில், அதிமுகவில் பொதுக்குழு கூட்டம் ஜூன் 23ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருப்பதால், பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி திண்டுக்கல் எஸ்.சூரியமூர்த்தி என்பவர் அதிமுக உறுப்பினர் என கூறி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை நிராகரிக்கக் கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நிராகரிப்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணையை நீதிமன்றம் ஜூலை 22ம் தேதிக்கு தள்ளிவைத்தது. இருப்பினும், இந்த வழக்கை முன் கூட்டியே விசாரிக்க வேண்டும் என சூரியமூர்த்தி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி பிரியா முன்பு விசாரணைக்கு வந்தது.

இதனிடையே,

அப்போது, ஓ.பி.எஸ். தரப்பில் வழக்கறிஞர் ராஜலட்சுமி ஆஜராகி பொதுக்குழு கூட்டத்தை தள்ளிவைக்கக் கோரி இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளதால், அந்த கூட்டத்தை எதிர்த்த மனு காலாவதியாகிவிட்டதாக கருத வேண்டுமென வாதிடப்பட்டது.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்து தான் பொதுக்குழுவை கூட்ட முடியும் என்றும், ஆனால் பொதுக்குழுவை தள்ளிவைக்க ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தானே கடிதம் எழுதியுள்ளதாகவும் ஓ.பி.எஸ். தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பொதுக்குழு நடைபெற்றால் இருதரப்பிலும் லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடுவார்கள் ,மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும்; ஏற்கெனவே,அதிமுக தொண்டரான மாரிமுத்து தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 2001 ஆண்டு ஜெயலலிதா எதிரான வழக்கின் தீர்ப்பின் போது மூன்று மாணவிகள் பேருந்தில் எரிக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றது, தமிழகம் தற்போது அமைதிப் பூங்காவாக இருக்கிறது இந்த பொதுக்குழு நடைபெற்றால் பெருமளவில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதிமுக கட்சி தரப்பில் விஜய பிரசாந்த் ஆஜராகி, மனுதாரர் சூரியமூர்த்தி கட்சி உறுப்பினரே இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு மனுதாரர் தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டு, தான் உறுப்பினர் இல்லை என்பதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என வாதிடப்பட்டது.

அப்போது பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் சபாநாயகர் தனபால் உள்ளிட்டோர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து பொதுக்குழுவிற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வேண்டுமென்ற மனு குறித்து அனைத்து மனுதாரர்களும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி பிரியா, விசாரணையை நாளை (ஜூன் 21) தள்ளிவைத்துள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம், விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டத்தை தள்ளிவைக்க வேண்டுமென ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்-க்கு எழுதிய கடிதத்தை சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இது ஓ.பி.எஸ் கோர்ட் படியேறி இருப்பது பொதுக்குழுவுக்கு தடை கோரும் நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Ops letter to eps to postpone general council meeting that submitted in civil court