ops statement : அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓபிஎஸ் பாஜக-வில் அதிகளவு நெருக்கம் காட்டி வருவதாகவும், கூடிய விரைவில் பாஜக-வில் இணைய இருப்பதாக பரவிய கருத்துக்கு ஓபிஎஸ் அறிக்கை மூலம் விளக்கமளித்துள்ளார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு குடும்பத்துடன் பா.ஜ.கவில் இணைந்துவிடுவார் அமமுக -வைச் சேர்ந்த தங்கத் தமிழச்செல்வன் கடந்த சில தினங்களுக்கு முன்பு கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அதே போல் "ஓபிஎஸ் பாஜக-வின் ஏஜெண்டு அதனால் தான் அவரை நாங்கள் பதவியில் இருந்து இறக்கினோம்" என்றும் அமமுக பொதுச்செயலாக டிடிவி தினகரனும் செய்தியாளர் சந்திப்பில் போட்டுடைத்தார்.
இதுத் தொடர்பான கருத்துக்கள் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவியது. மேலும் பாஜக தலைவர்களுடன் ஓபிஎஸ் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வைரலாகியது. இந்நிலையில், துணை முதல்வர் ஓபிஎஸ் இதுக் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, “ நான் பாரதிய ஜனதா கட்சிக்கு செல்வதாக கூறுவது வடிகட்டிய பொய். பாஜகவுக்கு செல்லப்போகிறேன் என்று ஒரு அடுக்காத புரளியை அவதூறாக பரப்புகின்றனர். அதிமுகவில் எளிய தொண்டனாக இருந்து கனவிலும் எதிர்பாராத உயரங்களை அடைந்தேன். உயிர்போகும் நாளில் அதிமுக கொடியை போர்த்துவதையே என் வாழ்நாளில் பெருமையாக கருதுகிறேன்.
என் மீது பரப்பப்படும் அவதூறுகளையும் பொய் குற்றச்சாட்டுகளையும் மக்கள் ஏற்கமாட்டார்கள். மெகா கூட்டணி ஈட்ட இருக்கும் வெற்றியை நினைத்து சில குள்ளநரிகள் என் மீது வதந்தி பரப்புகின்றனர். என் மீது வதந்தி பரப்பி என் அரசியல் வாழ்க்கையை காயப்படுத்த அலைவதை நினைத்து வேதனைப்படுகிறேன்.
என் மீது பரப்பப்படும் அவதூறுகளையும், குற்றச்சாட்டுகளையும் அதிமுக தொண்டர்களும், மக்களும் ஏற்கமாட்டார்கள். அதிமுகவில் எளிய தொண்டனாக இருந்து கனவிலும் எதிர்பாராத உயரங்களை அடைந்தேன்.
May 2019
மேலும் ஒரு விவசாயி மகனாக பிறந்த என்னை பல உச்சங்களில் அமர்த்தி மக்கள் திலகமும், மகராசி தாயும் உயிராக போற்றிய இயக்கத்தை, இக்கட்டான காலத்தில் அன்புச்சகோதரர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களோடு இணை கரம் கொண்டு இந்த இயக்கத்தை இமையாக காத்து வருகிறார்” என்று கூறியுள்ளார்.