தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே காவாரப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் பங்கேற்பதற்காக ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் இன்று(செப்டம்பர் 9) காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மன்னார்குடியில் இருந்து ஒரத்தநாடு நோக்கி சசிகலாவும் மற்றொரு காரில் வந்து கொண்டிருந்தார். சசிகலா, வைத்திலிங்கம் இருவரும் வழியில் சந்தித்து பேசினர்.
வைத்திலிங்கத்திற்கு பிறந்தநாள் என அறிந்ததும், அவருக்கு வாழ்த்து கூறி, சசிகலா இனிப்பு வழங்கினார். சசிகலா, வைத்திலிங்கம் சந்திப்பு சிறிது நேரம் நிகழ்ந்தது. இந்த சந்திப்பின்போது, சசிகலா, வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் உடனிருந்தனர். இது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் நீடித்து வருகிறது. ஓபிஎஸ், இபிஎஸ் என 2 அணிகளாக செயல்பட்டு வருகின்றன. இந்த பிரச்சனை விவகாரம் நீதிமன்றத்திலும் நடந்து வருகிறது. ஜூலை 11 பொதுக்குழுவில் ஒற்றை தலைமை குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இந்த பொதுக்குழுவிற்கு எதிராக இருவரும் நீதிமன்றத்தை நாடி வருகின்றன.
ஓ. பன்னீர்செல்வம் கட்சியில் அனைவரும் ஒற்றிணைந்து செயல்பட வேண்டும் எனக் கூறி வருகிறார். டிடிவி தினகரன், சசிகலா என அனைவரும் ஒற்றிணைந்து கட்சியில் செயல்பட வேண்டும் எனக் கூறி வருகிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் இதற்கு செவிசாய்க்க வில்லை. எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
ஒற்றிணைந்து செயல்படலாம் என்ற ஓபிஎஸ் அழைப்பிற்கு டிடிவி தினகரன் வரவேற்பு தெரிவித்திருந்தார். சசிகலா தரப்பிலிருந்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில், வைத்திலிங்கம் திடீர் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்து வைத்திலிங்கம் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சசிகலாவுடனான சந்திப்பு யதார்த்தமானது, அரசியல் ரீதியாக சசிகலாவை சந்திக்கவில்லை. இபிஎஸ் ஆணவப்போக்கிற்கு தொண்டர்கள் தக்க பதிலடி தருவார்கள்.
தன்னை பாதுகாத்துக்கொள்ள, எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை அழிக்க நினைக்கிறார். ஓபிஎஸ் தொடர்பான ஈபிஎஸுன் வார்த்தையை தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள். அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை வலுப்படுத்த வேண்டும்" என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil