அ.தி.மு.கவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் செயல்பட்டு வருகின்றனர், அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். ஒற்றை தலைமை விவகாரத்தில் இருவரும் நீதிமன்றம் சென்றுள்ளனர். இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.
கடந்த ஜூலை 11-ம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு நடைபெற்றது. இதில் அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டு இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும், ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்தது. பதிலுக்கு அதிமுகவில் இருந்து இபிஎஸ் நீக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓ.பி.எஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை வருகிற 4-ம் தேதி மீண்டும் நடைபெற உள்ளது.
இந்நிலையில், வருகிற 21-ம் தேதி அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என ஓ. பன்னீர்செல்வம் அணி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதலோடு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இன்று (டிசம்பர் 18) சென்னை விமான நிலையம் வந்த ஓ.பன்னீர்செல்வத்திடம் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, "வருகிற 21-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு பின் ஏற்படும் மாற்றங்கள் குறித்து முன்கூட்டியே சொல்ல இயலாது" என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/