அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும், பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களுக்கும் கடும் மோதல் நிலவியது. இந்நிலையில் அதிமுகவின் தலைமை அலுவலகத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கைப்பற்றி உள்ளனர்.
அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்றுவருகிறது. 16 தீர்மானங்களில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிரந்தர பொதுச் செயலாளராக ஜெயலலிதா இருப்பார் என்ற விதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இத்தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒரு பக்கம் அதிமுக பொதுக்குழு நடைபெற்று வரும் நிலையில் மறுபக்கம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கைப்பற்றி உள்ளனர். அலுவலகத்தை சூழ்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள், அலுவலகத்திற்குள் நுழைந்து, முக்கிய ஆவணங்களை எரித்தனர். மேலும் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்களை தடுத்தபோது கடும் மோதல் ஏற்பட்டது. மாறி மாறி கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் திரண்ட இபிஎஸ் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட செயலாளர் வி.என்.ரவி. உள்பட பலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.மேலும் நிலையை கட்டுக்குள் வைக்க அப்பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. அதிமுக அலுவலகத்தின் பால்கனியில் நின்று கொண்டு பன்னீர் செல்வம் கையசைத்தார். அவருடன் வைத்தியலிங்கம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உடன் இருந்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil