தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழையின் தீவிரம் குறைந்து காணப்பட்ட நிலையில், இன்று கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், தேனி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று கோவை மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக பீளமேடு, சிங்காநல்லூர், உக்கடம், காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துவருகிறது. தொடர்ந்து மழை பெய்துவருவதால் அலுவலக பணி முடிந்து வீடுகளுக்கு திரும்பும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் அதிகபட்சமாக 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து கோவை மாவட்டம் வால்பாறை, உபாசி, சின்கோனா, சோலையார், நீலகிரி மாவட்டம் பார்சன் வேலி ஆகிய இடங்களில் தலா 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, மேல் பவானி ஆகிய இடங்களில் ஆறு சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.