தென் மேற்கு பருவமழை காரணமாக கோவை, நீலகிரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், நேற்றைய தினம் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது.
இதே போல இன்று மேலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மிக கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட நிலையில் மாவட்டம் முழுவதும் பல பகுதிகளில் மழையின் தாக்கம் காணப்பட்டு வருகிறது . இதனால் பொதுமக்களை இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
குறிப்பாக கூடலூர், பந்தலூர், சுற்றுப்பகுதிகளில் காற்றுடன் கூடிய மழையால் பல பகுதிகளில் மரங்கள் விழுந்து பாதிப்பு ஏற்பட்டது. உதகை மற்றும் குந்தா சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர் மழையும் பகல் நேரங்களில் பலத்த காற்றோடு சாரல் மழையும் பெய்து வருகிறது.
அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காற்றுடன் கூடிய மழை தொடர்ந்து வருவதால் பள்ளிகளுக்கு செல்லக்கூடிய மாணவ மாணவிகள் பாதிப்படைவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட நான்கு தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சி தலைவர் லட்சிமி பவ்யா தண்ணிரூ உத்தரவிட்டுட்ள்ளார். இதே போல கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.