Advertisment

நடைபாதை கடைகளை அப்புறப்படுத்துவதற்கு பதில் ஒழுங்குபடுத்தலாம்!

நடைபாதை வியாபாரிகள் அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இரண்டு ஆண்டுகளாக அரசுத்தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai pavement shops

நடைபாதை வியாபாரிகள் ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்து ஜூலை 20 அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நடைபாதை வியாபாரிகளை அப்புறப்படுத்துவதற்கு பதில் அவர்களை ஒழுங்குபடுத்தலாம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisment

இது தொடர்பாக டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில்,

‘‘உயர்நீதிமன்றம் எதிரே உள்ள என்.எஸ்.சி போஸ் சாலையில் நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்து கடை வைக்க தடை விதித்து, ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே என்.எஸ்.சி போஸ் சாலையில் கடை வைத்திருந்தவர்கள் மீண்டும் அதே பகுதியில் நடைபாதையை மறித்து கடை வைத்துள்ளனர். அவர்களுக்கு பெரு நகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அடையாள அட்டைகள் வழங்கியுள்ளனர். எனவே நடைபாதை வியாபாரிகளுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை ரத்து செய்ய வேண்டும் அடையாள அட்டை வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று காலை விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகும்படி, சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை பகல் ஒருமணிக்கு தள்ளிவைத்தனர்.

வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நேரில் ஆஜரானார்.

அப்போது நீதிபதிகள், நடைபாதை வியாபாரிகள் ஒழுங்குமுறைச் சட்டத்தை அமல்படுத்த என்ன என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? தினந்தோறும் இந்த விவகாரம் தொடர்பாக வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு வழக்கிலும் காலஅவகாசம் கேட்கப்படுகிறது. நடைபாதை வியாபாரிகளுக்கு மாற்று இடம் ஏதேனும் அடையாளம் காணப்பட்டுள்ளதா? இது சம்பந்தமான குழு அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர்.

போக்குவரத்து நெரிசல் இருக்கும் பகுதியில் நடைபாதை வியாபாரிகளை எப்படி அனுமதித்தீர்கள் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடைபாதை வியாபாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றார்.

அவர்களுக்கு மாற்று இடம் எங்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது எனவும், அவர்களை அப்புறப்படுத்தாமல், ஏன் ஒழுங்குபடுத்த கூடாது எனவும் நீதிபதிகள் கேட்டனர்.

அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார் .

நடைபாதை வியாபாரிகள் அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இரண்டு ஆண்டுகளாக அரசுத்தரப்பில் கூறப்பட்டு வருவதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், மனுவுக்கு ஜூலை 20ல் பதிலளிக்கவும், ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, வழக்கை தள்ளிவைத்தனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment