வழிபாட்டு தலங்கள் சட்டம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்ப்பு என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் 1991-ன் படி, இந்தியாவில் எந்த ஒரு மத வழிபாட்டு தலமும் 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி வழக்கின் கீழ், அயோத்தியைத் தவிர, அனைத்து வழிபாட்டுத் தலங்களின் தன்மையும் அப்படியே பராமரிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.
இந்தியாவில் கடந்த 1991-ம் வழிபாட்டு தளங்கள் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்தியாவில் எந்த ஒரு மத வழிபாட்டு தலமும் 1947 ஆகஸ்ட் 15-ந்தேதியில் எந்த நிலையில் இருந்ததோ, அதே நிலையிலேயே தொடர வேண்டும் என்று இந்த சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தின் சில சலுகைகளை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தன.
அப்போது இந்திய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, “புதிய வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படக்கூடாது அல்லது நடவடிக்கைகளுக்கு உத்தரவிடப்படக்கூடாது என்று அறிவுறுத்துவது பொருத்தமானது என்று நாங்கள் கருதுகிறோம். நிலுவையில் உள்ள வழக்குகளில், பயனுள்ள இடைக்கால உத்தரவுகள் அல்லது ஆய்வு செய்வதற்கான உத்தரவுகள் உள்ளிட்ட இறுதி உத்தரவுகளை சிவில் நீதிமன்றங்கள் அடுத்த விசாரணை தேதி வரை வழங்க முடியாது” என்று உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விரைவில் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “வழிபாட்டு தலங்களின் தன்மை 15-8-1947-ம் நாளில் எப்படி இருந்ததோ, அதே தன்மை என்றென்றும் பாதுகாப்பட வேண்டும் என்ற சட்டத்தை நிலை நிறுத்தும் முயற்சியை எல்லோரும் வரவேற்க வேண்டும். இந்த சட்டம் உயரிய நோக்கத்துடன் 1991-ல் நிறைவேற்றப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு இந்த வழக்கை விரைவில் விசாரித்து தீர்ப்பை வழங்க வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பு” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“