பேரறிவாளன் விடுதலை ஆவாரா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. பா.ரஞ்சித்திடம் ராகுல் காந்தி கொடுத்த வாக்குறுதி இந்த கேள்வியை வலிமைப் படுத்துகிறது.
பேரறிவாளன் உள்பட 7 பேர், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இன்னமும் சிறையில் இருக்கிறார்கள். இவர்களை விடுவிக்க முன்னெடுத்த பல முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இதற்கான முயற்சிகளை மேற்கொண்டபோது, அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு முட்டுக்கட்டை போட்டது. சிபிஐ தொடர்ந்த வழக்கில் விடுவிக்கும் முடிவை மத்திய அரசுதான் மேற்கொள்ள முடியும் என நீதிமன்றத்தில் மனு போட்டதைத் தொடர்ந்து, 7 பேரின் விடுதலை இழுபறியானது.
இந்தச் சுழலில் இயக்குனர் பா.ரஞ்சித் நேற்று (ஜூலை 10) டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார். அப்போது அரசியல், சினிமா உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை விவாதித்தனர். ‘ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்கு காங்கிரஸ் உதவவேண்டும்’ என அப்போது ரஞ்சித் வலியுறுத்தியதாக தெரிகிறது.
‘பேரறிவாளன் விடுதலைக்கு எதிராக எங்கள் குடும்பத்தில் யாரும் இல்லை. என்னால் இயன்ற உதவியை செய்ய நான் தயார்’ என அப்போது ராகுல் கூறியதாக டி.வி.க்கு அளித்த பேட்டியில் ரஞ்சித் கூறினார். இதனால் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் விடுதலை ஆகும் வாய்ப்பு உருவாகுமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
எனினும் பேரறிவாளன் விடுதலையில் குறுக்கே நிற்பது ராஜீவ் குடும்பம் அல்ல! காங்கிரஸ் ஆட்சியாக இருந்தாலும், பாஜக ஆட்சியாக இருந்தாலும் மத்திய அரசின் கொள்கை இந்த விஷயத்தில் ஒரே மாதிரியாக இருந்து வருகிறது. ராகுல், ‘நாங்கள் தடையாக இல்லை’ என கூறுவதால் மட்டுமே மத்திய அரசின் கொள்கை முடிவு மாறிவிடுமா? என்பது சந்தேகம்!
தவிர, பா.ரஞ்சித்திடம் இதை சொன்ன ராகுல் காந்தி மத்திய அரசிடம் எழுத்து பூர்வமாக தெரிவிப்பாரா? அதன் அடிப்படையில் நீதிமன்றத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றுமா? என்பதை பார்க்கவேண்டும். அப்படி நடந்தால், பேரறிவாளன் உள்பட 7 பேருக்கு விடுதலைக்கான வாய்ப்பு பிரகாசம் ஆகும்!