/indian-express-tamil/media/media_files/vLVrM9ajsRyMn96mEBzy.jpg)
பாலமேடு ஜல்லிக்கட்டு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, உலகப் புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டுவில் வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்து வந்த 14 காளைகளைத் தழுவிய மாடுபிடி வீரர் பிரபாகரனுக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. பாலமேடு ஜல்லிக்கட்டுவில் மொத்தம் 847 காளைகள் பங்கேற்றன. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற பொதும்புவைச் சேர்ந்த பிரபாகரன் அதிகபட்சமாக 14 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்து முதல் பரிசாக அறிவிக்கப்பட்ட காரை தட்டிச் சென்றார்.
மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 3 நாட்கள் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது அழக்கம். இந்த ஆண்டு முதல் நாளாக அவனியாபுரத்தில் திங்கள்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதையடுத்து, மதுரை பாலமேட்டில் செவ்வாய்க்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
விறுவிறுப்பாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில், 847-க்கும் மேற்பட்ட காளைகள், 485 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். மொத்தம் 10 சுற்றுகள் நடைபெற்றன. இதில், காலை முதல் மாலை வரை வாடிவாசலை தாண்டிய காளைகளை மாடுபிடி வீரர்கள் அதே உற்சாகத்துடன் காளைகளைத் தழுவி அடக்கினர். யார் கைகளிலும் அகப்படாமல் வெற்றி பெற்ற காளைகளுக்கு தங்கக் காசுகள் பரிசளிக்கப்பட்டன.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. ஜல்லிக்கட்டு போட்டியின் முடிவில், அதிகபட்சமாக 14 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த பொதும்புவைச் சேர்ந்த பிரபாகரன் முதல் பரிசு காரை தட்டிச் சென்றார். இவர் கடந்த 2020, 2021, 2022-ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சின்னப்பட்டியை சேர்ந்த தமிழரசன் 11 காளைகளை அடக்கி 2-ம் இடத்தையும், 8 காளைகளை பிடித்த கொந்தகை பாண்டீஸ்வரன் மூன்றாவது இடத்தையும் பிடித்தார்.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில், களத்தில் நின்று விளையாடிய புதுக்கோட்டை ராக்கெட் சின்னகருப்பு காளை முதல் பரிசாக காரை வென்றது. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற வீரர்களில் 14 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 14 பேர் மற்றும் பார்வையாளர்கள் 9 பேர், காவலர்கள் 3 பேர் என மொத்தம் 40 பேர் காயமடைந்தனர்.
இதில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெறும் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த டி.எஸ்.பி விஜயராஜை காளை ஒன்று முட்டியது. அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (17.01.2024) நடைபெற உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.