/indian-express-tamil/media/media_files/2025/07/11/palani-rope-car-2025-07-11-16-04-39.jpg)
வருடாந்திரப் பராமரிப்பு: பழநி ரோப் கார் சேவை ஜூலை 15 முதல் ஒரு மாதம் நிறுத்தம்!
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்குச் செல்லப் பயன்படுத்தப்படும் ரோப் கார் (கம்பி வட ஊர்தி) சேவை, வருடாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது. ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை, மொத்தம் 31 நாட்களுக்கு இந்தச் சேவை இடைநிறுத்தப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பழநி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்கள், படிக்கட்டுகள், யானைப் பாதை, மின் இழுவை ரயில் (வின்ச்) மற்றும் ரோப் கார் என பல வழிகளை பயன்படுத்துகின்றனர். இதில், மின் இழுவை ரயில் மூலம் சுமார் 7 நிமிடங்களிலும், ரோப் கார் மூலம் வெறும் 3 நிமிடங்களிலும் மலை உச்சியை அடையலாம். குறிப்பாக, மலையின் இயற்கை அழகை ரசிக்க விரும்பும் பக்தர்கள் ரோப் கார் சேவையையே பெரும்பாலும் விரும்புவர்.
ரோப் கார் சேவைக்கு மாதந்தோறும் சில நாட்கள் பராமரிப்புப் பணிகளுக்காகவும், ஆண்டுதோறும் 30 முதல் 40 நாட்கள் வரை நீண்ட கால பராமரிப்புக்காகவும் சேவை நிறுத்தப்படுவது வழக்கமான நடைமுறையாகும். அதன் தொடர்ச்சியாகவே, இந்த ஆண்டு 31 நாட்களுக்கு ரோப் கார் சேவை நிறுத்தப்படுகிறது. எனவே, இந்த நாட்களில் பழநி மலைக்கோயிலுக்கு வர திட்டமிட்டுள்ள பக்தர்கள், மின் இழுவை ரயில், படிப்பாதை அல்லது யானைப் பாதை போன்ற மாற்று வழிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.