/tamil-ie/media/media_files/uploads/2023/07/hotel-virudhunagar.jpg)
சென்னையில் ஹோட்டல் குழம்பில் காகிதம்; சாப்பிட்ட 6 பேருக்கு வாந்தி மயக்கம்
சென்னை தியாகராய நகரில் விருதுநகரை முன்னொட்டாகக் கொண்ட பிரபல ஹோட்டலில் மதியம் அசைவ விருந்து சாப்பிட்ட 6 பேருக்கு அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் குழம்பில் காகிதம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சென்னை, தியாகராய நகரில் பிஞ்சுளா சுப்பிரமணியன் தெருவில் பிரபல செட்டிநாடு அசைவ உணவகமான விருதுநகர் அய்யனார் ஹோட்டல் இயங்கி வருகிறது. இந்த ஹோட்டலில், திங்கள்கிழமை மதியம் 1:30 மணியளவில் ஐ.டி துறையில் பணிபுரியும் பெண் ஒருவர் உட்பட 15-க்கும் மேற்பட்டோர் மதிய உணவு சாப்பிட சென்றனர். இதில் பலர் சிக்கன் பிரியாணி , சிக்கன், மட்டன் அசைவ சாப்பாடு ஆகியவற்றை ஆர்டர் செய்து சாப்பிட்டனர்.
ஹோட்டலில் சாப்பிட்ட உடனே ஐடி பெண் ஊழியர் உட்பட 6 பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதை அடுத்து சாப்பிட்ட உணவால் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து, அவர்கள் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை மாலை 3 மணிக்கு இந்த உணவகத்தில் ஆய்வு நடத்தினர்.
உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்கள் அருந்திய உணவு மற்றும் உணவு தயாரிக்கும் கூடத்தில் நேரில் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் அதிகாரிகள் இறைச்சி கெட்டுப் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதோடு, ஹோட்டலில் இருந்த குழம்பில் சோதனை செய்தபோது, குழம்பில் காகிதம் இருப்பதைக் கண்டுபிடித்த அதிகாரிகள் மேலும் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு சீல் வைக்கவும் உரிய விளக்கம் கோரி நோட்டீசும் வழங்கிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், உணவக உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்து சென்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.