/indian-express-tamil/media/media_files/2025/10/07/paramakudi-2025-10-07-11-38-07.jpeg)
Paramakudi VAO arrest
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பட்டா மாற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை (வி.ஏ.ஓ.) லஞ்ச ஒழிப்புப் போலீசார் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுகாவைச் சேர்ந்த ஒருவருக்கு, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 3 சென்ட் இடத்திற்கு 'டி.நமுனா' பட்டா வழங்கப்பட்டிருந்தது. இந்தப் பட்டாவை தன் பெயருக்கு மாற்றக் கோரி, அவர் வேந்தோணி குரூப் வி.ஏ.ஓ.வான செல்வகுமாரை (44) கடந்த 8 நாட்களுக்கு முன்பு சந்தித்துள்ளார்.
அப்போது, டி.நமுனா பட்டா வழங்குவதற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என்று வி.ஏ.ஓ. செல்வகுமார் கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர், ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார்.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனையின் பேரில், நேற்று இரவு ரசாயனம் தடவிய பணத்தை வி.ஏ.ஓ. செல்வகுமாரிடம் புகார் அளித்தவர் கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. ராமச்சந்திரன் உள்ளிட்ட போலீசார், வி.ஏ.ஓ. செல்வகுமாரை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட வி.ஏ.ஓ.விடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.